உள்ளூர் செய்திகள்

முதலமைச்சரின் பரிந்துரையை கவர்னர் திருப்பி அனுப்பியதை தவிர்த்திருக்க வேண்டும்- சபாநாயகர்

Published On 2023-06-16 07:07 GMT   |   Update On 2023-06-16 07:21 GMT
  • முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது.
  • தண்டனை பெற்றால் மட்டும்தான் பதவியில் இருக்கக்கூடாது.

பணகுடி:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதி பாசன விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு இன்று முதல் வரும் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி நெல்லை மாவட்டம் ராதாபுரம் பாசனத்திற்கு அழகப்பபுரம் அருகே நிலப்பாறை திருமூலநகர் கால்வாயில் இருந்து 150 கன அடி தண்ணீரை சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார்.

இதன் மூலம் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரத்து 987 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பயன்பெறும். 52 குளங்கள் மூலம் மறைமுகமாக 1013 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தனது அமைச்சரவைக்கு யார்-யாருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக முதலமைச்சருக்கு தான் உள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை கவர்னர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை தவிர்த்திருக்க வேண்டும். முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. சட்டம் அதைத்தான் சொல்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நீதிமன்ற காவல், வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்சர் பதவியில் இருக்க கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை. தண்டனை பெற்றால் மட்டும்தான் பதவியில் இருக்கக்கூடாது. தொடர்ந்து, கவர்னர் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News