உள்ளூர் செய்திகள்

கோவை வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி

Published On 2023-07-19 14:23 IST   |   Update On 2023-07-19 14:23:00 IST
  • மர்மநபர் யூடியூப் சேனலை பின்தொடர்ந்தால் பணம் கிடைக்கும் என்றார்.
  • சதீஷ்குமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

கோவை,

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் மகாத்மா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது36).

இவரது வாட்ஸ் ஆப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மெசேஜ் வந்தது. அதில், ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து சதீஷ்குமார் அவரது செல்போன் எண், இணையதள முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தார்.

a

பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்மநபர் தான் 'மைன்ட் ஷேர் மார்க்கெட்டிங் இந்தியா' நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து அவர் எங்களது நிறுவன இணையதளத்தின் யூடியூப் சேனலை பின்தொடர்ந்தால் பணம் கிடைக்கும் எனவும், முதலீடு செய்ய தேவையில்லை என கூறினார்.

அதன்படி சதீஷ்குமார் அந்த சேனலை பின்தொடர்ந்தபோது அவருக்கு கமிஷனாக ரூ.150 கிடைத்தது. தொடர்ந்து சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட அந்த நபர் ஓட்டல் ரிவ்யூ செய்தால், அதிகளவில் கமிஷன் கிடைக்கும், அதற்கு நீங்கள் சிறிது முதலீடு செய்ய வேண்டும் என ஆசை வார்த்தை கூறினார்.

இதனை உண்மை என நம்பிய சதீஷ்குமார் முதலில் 2 கட்டங்களாக அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.38,386 முதலீடு செய்தார்.

இதனால் அவருக்கு கமிஷன் தொகை என 57,774 கிடைத்தது. தொடர்ந்து அவர் சிறிது, சிறிதாக ரூ.5,02,222 முதலீடு செய்தார்.

ஆனால், அதன்பின்னர் அவருக்கு கமிஷன் தொகை வரவில்லை. முதலீடு செய்த தொகையும் திருப்பி கிடைக்கவில்லை. மர்ம நபர் ஆசைவார்த்தை கூறி ரூ.5,02,222 மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News