உள்ளூர் செய்திகள்

கோவை பட்டதாரி இளம்பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி

Published On 2023-06-15 14:35 IST   |   Update On 2023-06-15 14:35:00 IST
  • டாஸ்க்குகளை முடித்தால், ஆன்லைன் மூலம் வேலை தருவதாகக் கூறி ஒரு லிங்கை அனுப்பினர்.
  • ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லத்திகா லட்சுமி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

கோவை,

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்.

இவரின் மனைவி லத்திகா லட்சுமி (வயது29). பி.காம் பட்டதாரி. இவர் வீட்டிலிருந்தபடியே கணக்காளராக வேலை செய்து வருகிறார்.

இவரது செல்போனில் வாட்ஸ்-அப்புக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் டாஸ்க்குகளை முடித்தால், ஆன்லைன் மூலம் வேலை தருவதாகக் கூறி ஒரு லிங்கை அனுப்பினர்.

பின்னர், லத்திகா லட்சுமியை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் லிங்க் மூலம் சென்று யூடியூப் வீடியோவை பார்த்து லைக் கொடுத்தால் போதும் வருமானம் கிடைக்கும் என கூறியுள்ளார்.இதனை நம்பி லத்திகா வீடிய விற்கு லைக் கொடுத்தார். பின்னர், டெலிகிராம் லிங்க் மூலம் இணைந்து பணியாற்ற வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், ரூ.10 ஆயிரம் முதலீடு செய்ய கூறினர். லத்திகா லட்சுமி ரூ.10 ஆயிரத்தை முதலீடு செய்தார். இதன் மூலம்அவருக்கு ரூ.14 ஆயிரம் வருமானம் கிடைத்தது. பின்னர், ரூ.60 ஆயிரம் முதலீடு செய்து ரூ.90 ஆயிரம் பெற்றார். இதை யடுத்து, ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வி.ஐ.பி உறுப்பினராக முடியும் எனவும்,ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு ஒரு புள்ளி அளிக்கப்பட்டு கூடுதல் வருமானம் கிடைக்கும் என கூறினர்.

இதனை நம்பி லத்திகா லட்சுமி ரூ.22 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லத்திகா லட்சுமி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News