கோவை என்ஜினீயரிடம் ரூ.18.75 லட்சம் ஆன்லைன் மோசடி
- 30 சதவீதம் பணம் கட்டினால் அதிகளவில் பணம் கிடைக்கும் என ஏமாற்றி கைவரிசை
- கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கோவை,
கோவை கணபதி பகுதியை சேர்ந்த தர்மராஜ் (வயது 33) என்பவர் கோவை சைபர் கிரைம் போலீசில் கொடுத்து உள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள தனியார் கம்பனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு டெலிகிராம் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் 30 சதவீதம் பணம் கட்டினால் அதிக அளவில் பணம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே நான் வீட்டில் இருந்த நகை, வீடு கட்ட வைத்திருந்த பணம் உள்பட ரூ.18.75 லட்சத்தை முதலீடு செய்து உள்ளேன். ஆனால் எனக்கு கூடுதல் பணம் கிடைக்கவில்லை. முதலீடு செய்த தொகையும் வரவில்லை.
எனவே நான் அந்த குறுஞ்செய்தி குறித்து விசாரித்து பார்த்தேன். அப்போது அது போலியான நிறுவனம் என்பது தெரியவந்தது. குறைந்த பணத்தை முதலீடு செய்தால் கூடுதலாக பணம் கிடைக்கும் என்று கூறி ஆன்லைன் மூலம் ஏமாற்றி மோசடி செய்து உள்ளனர். எனவே போலீசார் இதுகுறித்து விசாரித்து நான் முதலீடு செய்த பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.