ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.70 லட்சம் கொள்ளை
- ஈஸ்வர மூர்த்தி தனது காரை சிட்ரா அருகே உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
- ஈஸ்வர மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோவை,
கோவை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது50). ரியல் எஸ்டேட் அதிபர்.
நேற்று இரவு இவர் வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு நண்பரான கண்ணன் என்பவருக்கு கொடுப்பதற்காக காரில் புறப்பட்டார்.
இரவு 9.30 மணியளவில் ஈஸ்வர மூர்த்தி தனது காரை சிட்ரா அருகே உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது காரில் இருந்த பணம் மாயமாகி இருந்தது. ஈஸ்வரமூர்த்தி சாப்பிட சென்றதை நோட்டமிட்டு, மர்மநபர் கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த ரூ.70 லட்சம் பணத்தைத் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ஈஸ்வர மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் மர்ம நபர் பணத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை ஒண்டிப்புதூர் கிருஷ்ணன் நாயுடு வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (63). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர்.
சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றார்.
வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு வெளியில் வந்த அவர் பணத்தை மொபட்டில் உள்ள சீட்டுக்கு அடிப்பகுதியில் வைத்தார். இதனைத் தொடர்ந்து தேவராஜ் மொபட்டில் சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றார்.
மோட்டார் சைக்கிளை வங்கி முன்பு நிறுத்திவிட்டு வங்கியினுள் சென்றார். பின்னர் வந்து பார்த்த போது, வண்டியில் வைத்திருந்த பணம் மாயமாகி இருந்தது. இவர் வங்கிக்குள் சென்றதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர் வண்டியில் இருந்த பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள். நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் தினேஷ் (32). என்ஜினியரிங் பட்டதாரி. சம்பவத்தன்று இவர் வேலைக்கு நேர்காணலுக்காக கோவைக்கு வந்தார்.
அப்போது பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்கா அருகே அவரை, வாலிபர் ஒருவர் நேர்காணல் செய்தார். அப்போது அந்த நபர் ஐ.டி கம்பெனியில் வேலை என்பதால் கட்டாயமாக லேப்டாப் மற்றும் செல்போன் வேண்டும் என்றார். மேலும் அப்ளிகேஷனை லேப்டாப் செல்போனில் ஏற்ற ரூ.10 ஆயிரமும் கேட்டார்.
இதை நம்பிய தினேசும், தனது செல்போன், லேப் டாப் மற்றும் ரூ.6 ஆயிரம் கொடுத்தார். அதனை வாங்கி கொண்ட நபர் சிறிது நேரத்தில் வருகிறேன் என கூறி சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தினேஷ் காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை ஏமாற்றி யதாக அன்னூர் அடுத்த செங்காளி பாளையத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்(34) என்பவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் தயாநிதி. இவரது மனைவி மசக்காரணி (50). சம்பவத்தன்று இவர் ராஜ வீதி வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் முகவரி கேட்டார். அப்போது மசக்காரணி முகவரியை கூறிக்கொண்டிருந்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் மசக்காரணி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றார்.
இதுகுறித்து அவர் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற வாலி பரை தேடி வருகிறார்கள்.