கோவையில் இன்று காலை கியாஸ் கசிந்து தீ விபத்து - இளம்பெண் உடல் கருகினார்
- இன்று காலை 5 மணிக்கு எழுந்த பாக்கியலட்சுமி உணவு சமைப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார்.
- பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீளமேடு,
கோவை விளாங்குறிச்சி ரோடு தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 38). இவர் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு பாக்கியலட்சுமி சமையல் வேலைகளை முடித்து சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அப்போது சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு உள்ளது. இன்று காலை 5 மணிக்கு எழுந்த அவர் உணவு சமைப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார்.
அப்போது சமையல் அறை முழுவதும் கியாஸ் கசிந்து இருந்தது. தூக்க கலக்கத்தில் இருந்த பாக்கிய லட்சுமி கியாஸ் கசிந்து இருப்பது தெரியாமல் மின்சார சுவிட்சை போட்டார். இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உடல் கருகிய அவர் சத்தம் போட்டார்.
உயிருக்கு போராடிய அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவருக்கு 80 சதவீத தீக்காயம் இருந்ததால் பாக்கிய லட்சுமியை டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.