உள்ளூர் செய்திகள்

யானை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது.

அரசலாற்றங்கரையில் யானை விரட்டும் நிகழ்ச்சி

Published On 2023-04-09 14:08 IST   |   Update On 2023-04-09 14:08:00 IST
  • முருகன் சுயரூபம் காட்டிடவுடன், நம்பிராஜன், வள்ளியை முருகனுக்கு மணம் முடித்து வைக்கிறார்.
  • முருகப்பெருமான் சுய ரூபத்தில் காட்சி அளித்தலும் நிகழ்த்தி காட்டப்பட்டது.

சுவாமிமலை:

தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழாவில் வள்ளி கல்யாணம் நடைபெறும்.

அதாவது வேடர்குல அரசின் நம்பிராஜன் வளர்ப்பு மகளான வள்ளி, தினைபுனம் காவல் புரியும் போது, அவள் அழகை கண்ட நாரத முனிவர் அதனை முருகப்பெருமானிடம் கூற, வள்ளியின் அழகில் மயங்கி அவரை மணம் புரிந்திட கிழவர் வேடம் போடுவார் முருகர். பின்னர் களைப்பாக இருப்பதாக கூறி, வள்ளியிடம் தேனும் தினைமாவும் பருகிய பின், தாகம் என கூறி அருகில் இருந்த சுனைக்கு வள்ளியை அழைத்து செல்வதும், அங்கு வள்ளியை மணம் புரிவதாக முருகப்பெருமான் கூற, கிழவரின் குறும்பில் வள்ளி கோபிப்பதும், முருகன், விநாயகரை நினைக்க, அவர் யானையாக வந்து வள்ளியை விரட்ட, மிரண்ட வள்ளி, முருகனை பயத்தில் அணைக்க, பின் முருகன் சுயரூபம் காட்டிடவுடன், நம்பிராஜன், வள்ளியை முருகனுக்கு மணம் முடித்து வைக்கிறார்.

இதனை நினைவு கூறும் வகையில் அரசலாற்றங்கரையில் யானை விரட்டல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு சுவாமிமலை அரசலாற்றில், தினைபுனம் காத்த வள்ளியை விநாயகப்பெருமான் யானை உருவத்தில் வந்து விரட்டும் காட்சியும், பின் முருகப்பெருமான் சுய ரூபத்தில் காட்சி அளித்தலும் நிகழ்த்தி காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News