ஊழல் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி உள்ளது: சீமான்
- நடிகர் விஜய் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.
- அண்ணாமலை பேச்சால் பா.ஜனதா வளர்ந்து விடாது.
விருதுநகர் :
விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்துக்கு நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்று, சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேணடுமென கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. ஆனால் எங்களை பொறுத்தமட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசை, ஒரு தனி நபர் செயல்படவிடாமல் தடுப்பது ஏற்புடையதல்ல.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை சுறுசுறுப்பாக இயங்குகிறார். அவர் நேர்மையான அதிகாரி என்ற முறையில் ஊழல் பற்றி பேசுவதற்கு தகுதியானவர்தான். ஆனால் அவரது பேச்சால் பா.ஜனதா வளர்ந்து விடாது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
நடிகர் விஜய் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. நாங்களும் அதைத்தான் வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.