17 ஆண்டு கால காத்திருப்பு: வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர்
- நாளை அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
- சோதனை ஓட்டம் முடிந்தவுடன் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் அதனை பரங்கிமலை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
பரங்கிமலை புறநகர் ரெயில் நிலையத்தோடு இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம் காலதாமதம் ஆனது.
கோர்ட்டு வழக்குகளால் பணிகள் முடங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விரைவுபடுத்தப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இத்திட்டம் தொடங்கி 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ஒரு சில நாட்களில் இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் நாளை அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
வேளச்சேரி-பரங்கிமலை இடையான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரெயில் மூலம் நாளை மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை இந்த சோதனை ஓட்டம் முதன்மை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடக்கிறது.
இந்த சோதனை ஓட்டத்தின் போது அனுமதி இல்லாத நபர்கள் யாரும் ரெயில் தண்டவாளங்களை நெருங்கவோ அதன் அருகில் வேலை செய்ய வேண்டாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சோதனை ஓட்டம் முடிந்தவுடன் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் புதிய சேவையை தொடங்கி வைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே துறை வட்டாரம் தெரிவிக்கின்றன. பிரதமர் வருவதால் தான் அவரது பயண திட்டம் குறித்த அறிவிப்பு தாமதம் ஆகிறது.
திருச்சியில் 11-ந்தேதி நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்தப் பயணத்தின் போது ரெயில்வே திட்டங்களையும் தொடங்கி வைக்க முடிவு செய்யப்படுகிறது.
பறக்கும் ரெயில் திட்டம், பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரெயில் ஆகியவற்றை தொடங்கி வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தெற்கு ரெயில்வே மூலம் நடந்து முடிந்துள்ள திட்டப் பணிகள், அம்ரித் பாரத் ரெயில் சேவை ஆகியவற்றை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தமிழகம் வரும் பிரதமர் மோடி பறக்கும் ரெயில் சேவை மற்றும் மெட்ரோ ரெயில் புதிய சேவையை தொடங்கி வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெற்கு ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.