தமிழ்நாடு செய்திகள்

ராணிப்பேட்டையில் தோல் கழிவுநீர் குழாயில் விஷவாயு தாக்கி 4 பேர் மயக்கம்

Published On 2026-03-04 11:34 IST   |   Update On 2026-03-04 11:34:00 IST
  • விஷவாயு தாக்கி கத்தியவாடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மயங்கி விழுந்தார்.
  • சுத்திகரிப்பு பணிக்கு உதவியாக வந்திருந்த பெண்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் ராணிப்பேட்டை நகரம் மற்றும் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றி அனுப்பபடும் கழிவுநீர் பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

சுத்திகரிப்பு நிலையத்திற்கு தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் வரும் குழாயில் சுத்திகரிப்பு நிலையம் சார்பில் அவ்வப்போது அடைப்பு சரி செய்வது உள்பட பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை வி.சி.மோட்டூர் தனியார் கியாஸ் ஏஜென்சி எதிரில், சுத்திகரிப்பு நிலையத்திற்கு தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வரும் பெரிய அளவிலான குழாயில் அடைப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்ய அதன் மேல் புறத்தை திறந்து அதில் 4 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது விஷவாயு தாக்கி கத்தியவாடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(54) என்பவர் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த ஆற்காட்டை சேர்ந்த சாந்தகுமார் (31), மேல்விஷாரத்தை சேர்ந்த இப்திகார் உல்கக் (31), பூண்டிகிரமத்தைசேர்ந்த ரமேஷ்(46) ஆகியோர் ஏழுமலையை மீட்க முயன்றனர். அவர்களும் மூச்சு திணறி மயக்கம் ஏற்பட்டு மயங்கினர்.

இதை பார்த்த சுத்திகரிப்பு பணிக்கு உதவியாக வந்திருந்த பெண்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்து குழாய்க்குள் மயங்கிய நிலையில் இருந்த 4 பேரை உடனடியாக மீட்டனர்.

மீட்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏழுமலை மேல் சிகிச்சைக்காக பூட்டுத்தாக்கில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 3 பேருக்கும் வாலாஜா அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

இது தொடர்பாக ராணிப்பேட்டை, வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News