திருச்சி சிறுகனூரில் வருகிற 9-ந்தேதி நடைபெறும் தி.மு.க. 12-வது மாநில மாநாடு பணிகள் மும்முரம்
- திருச்சியில் மாநாடு நடத்தினால் அதைத்தொடர்ந்து வரும் தேர்தல் தி.மு.க. வெற்றி மாநாடாக தான் அமையும்.
- இந்த மாநாடு, தி.மு.க.வின் பலத்தை நிரூபிக்கும் ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும் என தொண்டர்கள் கருதுகிறார்கள்.
திருச்சி:
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி ஒருபுறம் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. மறுபுறம் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதேபோல் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் தி.மு.க. மாநில மாநாடுகளை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதை மரபாகவே கையாண்டு வருகிறது.
அதன்படி நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க.வின் பலத்தை நிரூபிக்கும் வகையிலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் வருகிற 9-ந்தேதி "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்கிற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான திருப்புமுனையாக தி.மு.க.வின் 12-வது மாநில மாநாடு 500 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
200 ஏக்கரில் மாநாட்டு திடலும், மீதமுள்ள 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடங்கள், சமையல் கூடம் உள்ளிட்ட இதர பிற வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடக்கிறது. சுமார் 10 லட்சம் பேர் திரளுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றித்தரும் வகையில் நடைபெறும் பணிகளை மாவட்ட அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என்.நேரு அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
மாநாட்டுத் திடல் மற்றும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வரும் பணிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை நேற்று அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு கேட்டறிந்தார். தொண்டர்களுக்கான உணவுக்கூடங்கள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினத்துடன் மாநாட்டு திடலில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்தை சரிசெய்வது உள்ளிட்டவை குறித்தும் லால்குடி டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து போலீசாருக்கும் ஆலோசனைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
திருச்சியில் மாநாடு நடத்தினால் அதைத்தொடர்ந்து வரும் தேர்தல் தி.மு.க. வெற்றி மாநாடாக தான் அமையும். கடந்த தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மாநாடு நடத்தி 9 தொகுதிகளை திருச்சி மாவட்டத்தில் முழுமையாக பெற்றது. அது மட்டுமின்றி தி.மு.க. ஆட்சிக்கும் வந்தது. அதே போல 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திருச்சி சிறுகனூரில் நடைபெறும் 12-வது மாநில மாநாடு முன்னோட்டமாக அமையும். இந்த மாநாடு, தி.மு.க.வின் பலத்தை நிரூபிக்கும் ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும் என தொண்டர்கள் கருதுகிறார்கள்.
இந்த மாநாட்டிற்கு தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றி எழுச்சியுரையாற்றுகிறார். முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு வரவேற்றுப் பேசுகிறார். தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.
மாநாட்டில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, திருச்சி சிவா ஆ.ராசா, கனிமொழி எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் தாயகம் கவி, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய அலுவலக செயலாளர் துறைமுகம் காஜா, துணை அமைப்புச் செயலாளர் ஆஸ்டின், தலைமை நிலைய அலுவலக செயலாளர் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வைர மணி, காடுவெட்டி ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.