செய்திகள்
மக்கள் நீதிமன்றம்

கடலூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,112 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2020-12-13 23:33 IST   |   Update On 2020-12-13 23:33:00 IST
கடலூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,112 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.10 கோடியே 43 லட்சத்து 66 ஆயிரத்து 899-க்கு தீர்வு காணப்பட்டது.
கடலூர்:

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், கடலூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று சிறிய அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றம் (மைக்ரோ நேஷனல் லோக் அதாலத்) நடைபெற்றது. இதற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கே.கோவிந்தராஜன் திலகவதி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செந்தில்குமார், மக்கள் நீதிமன்ற நீதிபதி செம்மல், குடும்பநல நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணைக்குழு செயலாளர் ஜோதி வரவேற்றார்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. இதில் மொத்தம் 3,685 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. இதன் முடிவில் 3,112 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.10 கோடியே 43 லட்சத்து 66 ஆயிரத்து 899-க்கு தீர்வு காணப்பட்டது.

இதில் கடலூர் மாவட்ட பார் அசோசியேஷன் தலைவர் சுந்தரமூர்த்தி, வக்கீல் சங்க தலைவர் சிவராஜ், செயலாளர் வனராசு மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய நீதிமன்றங்களிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

Similar News