செய்திகள்
தற்கொலை

குறிஞ்சிப்பாடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-12-10 15:16 GMT   |   Update On 2020-12-10 15:16 GMT
குறிஞ்சிப்பாடி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குறிஞ்சிப்பாடி:

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் அகரம் மேல காலனி தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ஆதிலட்சுமி (வயது 21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோபால் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, ஆதிலட்சுமியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆதிலட்சுமி கோபித்துக் கொண்டு, குறிஞ்சிப்பாடி அருகே ரெங்கநாதபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆதிலட்சுமி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார், ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை பழனி கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆதிலட்சுமிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், அவரது சாவு குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News