கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் - மாணவன் பலி
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த கடப்பேரி பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் பிரகாஷ் (வயது 18). பிளஸ்-2 முடித்து உள்ளார்.
இவர், நண்பர்களான பிளஸ்-2 முடித்த மதுராந்தகத்தை சேர்ந்த எழிலரசன், அரவிந்தன் ஆகியோருடன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் விண்ணப்பம் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து சென்று கொண்டிருந்தனர்.
கடப்பேரி பகுதி அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சென்றபோது வண்டலூரில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரகாஷ் உள்பட 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் அரசு பஸ்சின் சக்கரம் பிரகாஷின் தலையில் ஏறி இறங்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் எழிலரசன், அரவிந்தன் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவரான தண்டையார்பேட்டையை சேர்ந்த பூபதியை கைது செய்தனர்.