செய்திகள்

ரஜினிகாந்த், ஸ்டாலின் சந்திப்பின்போது அனைத்தும் பேசப்பட்டது - பிரேமலதா

Published On 2019-02-24 10:41 GMT   |   Update On 2019-02-24 10:41 GMT
தேமுதிக தலைவர் விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் ஆகியோர் சந்தித்தபோது அனைத்தும் பேசப்பட்டது என பிரேமலதா தெரிவித்துள்ளார். #DMDK $Premalatha
சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகின்றன. இரு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதேபோல், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணிகள் ஓரளவு உறுதியான போதிலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்கு பின் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:



தே.மு.தி.க.வுக்கு உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன் கூட்டணி. தே.மு.தி.க.வின் ஒட்டுமொத்த பலம் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும். 

மக்களவை தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். தே.மு.தி.க.வின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.

தே.மு.தி.க.வின் பலத்துக்கேற்ற கட்சியுடன் கூட்டணி அமைக்கும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததற்கு தே.மு.தி.க. சார்பில் நன்றி. விஜயகாந்த் உடனான ஸ்டாலின் சந்திப்பில் அரசியலும் உள்ளது. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் முயற்சித்து வருகின்றன. 3-வது அணி உருவாக வாய்ப்பில்லை.

விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் சந்தித்ததில் நலம் விசாரிப்பு மட்டுமல்ல, அனைத்தும் பேசப்பட்டுள்ளது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விஜயகாந்த் உரிய முடிவை அறிவிப்பார். தே.மு.தி.க.விற்கு கிடைக்கும் இடங்களை பொருத்து கூட்டணி முடிவு இருக்கும். 

ஒரு கட்சியை விமர்சித்ததால், அந்தக் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பது இல்லை. அரசியலுக்கு என்று ஒரு வியூகம் உள்ளது. கடந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து தே.மு.தி.க.வின் பலத்தை கணித்து விடக்கூடாது, மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. பலத்தை நிரூபிக்கும் என தெரிவித்துள்ளார். #DMDK $Premalatha
Tags:    

Similar News