ராஜபாளையத்தில் கழிவுநீர் ஓடையில் வாலிபர் பிணம்- கொலையா? போலீசார் விசாரணை
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமனில் இருளப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது.
இன்று காலை அந்த வழியே சென்றவர்கள் கழிவு நீர் வாய்க்காலில் ஆண் பிணம் கிடப்பதை பார்த்தனர். அவர் யார்? என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்து ராஜூக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் கீழராஜ குலராமன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர். கழிவு நீர் வாய்க்காலில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த வாலிபருக்கு 35 முதல் 40 வயது இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவரது உடலில் ரத்தக்காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதற்கான அறிகுறி உள்ளது.
எனவே அந்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. மேலும் அவர் யார்? என்ற விவரமும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.