தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2026-01-13 10:54 IST   |   Update On 2026-01-13 13:08:00 IST
  • தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கப்படும்.
  • கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படும்.

சென்னை:

2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க ஆணையிட்டுள்ளார்.

அதன்படி திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்படுகிறது.

2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள் மொழிக்கு வழங்கப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் விருது சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ.வுக்கும், பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கும் வழங்கப்படுகிறது.

 

பெருந்தலைவர் காமராசர் விருது எஸ்.எம்.இதயத் துல்லாவுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும், தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது முன்னாள் தலைமை செயலாளர் முதுமுனைவர் வெ.இறையன்புக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது சு.செல்லப்பாவுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் விருது விடுதலை விரும்பிக்கும் வழங்கப்படுகிறது.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக ரூபாய் 5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள்.

மேற்குறிப்பிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் திருநாளான வருகிற 16-ந்தேதி விருதாளர்களுக்கு வழங்க உள்ளார்.

Tags:    

Similar News