செய்திகள்

அமைச்சர்கள் - அதிகாரிகள் பதவி விலக வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Published On 2018-12-29 11:10 GMT   |   Update On 2018-12-29 11:50 GMT
பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் வழங்கிய விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #AnbumaniRamadoss #HIVBlood
கோவை:

கோவையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்க வந்த அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அத்திக்கடவு -அவினாசி திட்டம் 3500 கோடியில் திட்டமிட்டு தற்போது 1500 கோடியாக குறைத்து மாற்று வழியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது சாத்தியமில்லை.

உயர் மின்னழுத்த கோபுரங்களுக்காக 13 மாவட்ட விவசாயிகள் போராடி வருகிறார்கள். கேரளாவை போல் நிலத்தடியில் கொண்டு செல்லலாம். விவசாயிகளை அழித்து இத்திட்டம் எங்களுக்கு தேவையில்லை.

விவசாயிகளை அரசு ஏளனமாக பார்க்கிறது. குறைந்த பட்சம் அவர்களிடம் பேச்சுவார்த்தையாவது நடத்த வேண்டும்.

மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தால் முல்லை பெரியார், பரம்பிகுளம் ஆகியவை கேரள மாநிலத்திற்கு செல்லும். இதனால் தமிழகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பு தரும். அதனை அனைத்து கட்சிகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.

மேகதாது விவகாரம் தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அப்போது மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். சட்டமன்றம் ஜனவரி முதல் வாரம் கூட இருக்கிறது.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதி என சட்டம் இயற்றி ஜனாதிபதியிடம் கையெழுத்து பெற வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர்களுக்கு நஷ்ட ஈடு வரவில்லை. 500 கோடி கொடுத்துள்ளது போதவில்லை.

அவர்களின் வாழ்வாதாரத்தை சீரமைக்க மறு சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும்.

என்.எல்.சியில் 12,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது தேவையில்லை. அந்த நிறுவனமே தேவையில்லை. நிலத்தடி நீர் அந்த மாவட்டத்தில் 800 அடியாக குறைந்து விட்டது.

மக்களுக்கு வேலையில்லாமல் அவர்களுக்கு மட்டும் 3000 கோடி லாபம் வருகிறது. எனவே என்.எல். சி. விரிவாக்கத்தை தடை செய்ய வேண்டும். அந்த பகுதி பாலைவனமாகி விடக்கூடாது.


ஒரு மருத்துவராக நான் கூற விரும்புவது எச்.ஐ..வி ரத்தம் வழங்கியது மிகப்பெரிய தவறு. அதனை ஏற்க முடியாது. அதற்கு துறை அமைச்சரும் அதிகாரிகளும் தான் பொறுப்பு.

தமிழக சுகாதார துறை சரியான முறையில் செயல்படவில்லை. இதற்கு பொறுப்பேற்று அமைச்சர்களும் அதிகாரிகளும் பதவி விலக வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை சட்டத்தை மதிக்காமல் செயல்படுகின்றது. தமிழக அரசு அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. எனவே மூத்த வழக்கறிஞர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் வாதாட வேண்டும்.

டாஸ்மாக் பிரச்சனைக்கு மூத்த வழக்கறிஞர்களை கொண்டு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அப்படி வாதிடவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்திற்கு அல்லது குஜராத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #AnbumaniRamadoss #HIVBlood

Tags:    

Similar News