செய்திகள்

காஞ்சீபுரம் அருகே விபத்து - 3  பேர் பலி

Published On 2018-12-23 08:49 GMT   |   Update On 2018-12-23 08:49 GMT
காஞ்சீபுரம் அருகே விபத்தில் 3  பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

சென்னை போரூரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி ஜெகதாம்மாள் (வயது 58).

இவர்களது உறவினரான காஞ்சீபுரத்தை அடுத்த நாயகன்குப்பதை சேர்ந்த ஒருவரது 3 மாத குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக இறந்தது.

இதுபற்றி துக்கம் விசாரிப்பதற்காக இன்று காலை ஜெகதாம்மாள், அவரது மகன்கள் வள்ளியப்பன், நாகேந்திரன், அவரது மனைவி சித்ரா (30) உள்பட 7 பேர் காரில் புறப்பட்டனர். காரை மாங்காடை சேர்ந்த சக்திவேல் (35) ஓட்டினார்.

அதிகாலை 4 மணி அளவில் காஞ்சீபுரம் - ஓரகடம் சாலையில் கட்வாக்கம் கூட்டுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வாலாஜாபாத்தில் இருந்து ஓரகடம் நோக்கி வந்த லாரி திடீரென கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன் பகுதி நசுங்கியது. காரில் இருந்த டிரைவர் சக்திவேல், ஜெகதாம்மாள், சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் வள்ளியப்பன், நாகேந்திரன், அஞ்சுகம், விஜயலட்சுமி, அவரது மகள் ரபியா ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 5 பேரையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News