புதுச்சேரியில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடை
- எத்கெம் பார்மா சூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான ரிஸ்பிபிரஸ் டி.ஆர். என்ற இருமல் மருந்து விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
- திரவ மருந்துகள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
போலி மருந்து புகாரை தொடர்ந்து புதுச்சேரியில் நடந்த ஆய்வில் பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் விலை உயர்ந்த மருந்துகள் போலியாக தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த 19-ந் தேதி வரை நடந்த ஆய்வில் 38 வகையான போலி மருந்துகள் தயார் செய்து விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் மேலும் 2 இருமல் மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
குஜராத் மாநிலம் அகமதாபாத் பாவ்லா சந்த்கோதர் நெடுஞ்சாலையில் உள்ள எத்கெம் பார்மா சூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான ரிஸ்பிபிரஸ் டி.ஆர். என்ற இருமல் மருந்து (சிரப்) புதுச்சேரியில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு இருமல் மருந்தான உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரோர்கி பகுதியில் இருந்து இன்டியன் டிரக் விஷன் நிறுவனத்தின் மெடிகோப் டி சிரப் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 2 இருமல் மருந்துகளையும் மருந்துகடை உரிமையாளர்கள் வாங்கவும் விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திரவ மருந்துகள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதோடு துறைக்குத் தகவல் அளித்து விட்டு குறிப்பிட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு அல்லது விநியோகஸ்தர்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது