செய்திகள்

ஜெயலலிதா உணவு செலவு ரூ.1½ கோடி என்பது அபத்தம்- மதுசூதனன் கடும் தாக்கு

Published On 2018-12-22 09:32 GMT   |   Update On 2018-12-22 10:43 GMT
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவுக்கான செலவு ரூ.1½ கோடி என்பது அபத்தமானது என்று மதுசூதனன் தெரிவித்தார். #Jayalalithaa #ApolloHospital #Madhusudhanan
ராயபுரம்:

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாசர்பாடி முல்லை நகரில் இன்று நடைபெற்றது. வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவுக்கான செலவு ரூ.1½ கோடி என்பது அபத்தமானது. அவர் ரூ. 1½ கோடிக்கு உணவு சாப்பிடவில்லை.

சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாப்பிட்டு இருப்பார்கள். மருத்துவ சிகிச்சை பெற்றபோது 75 நாட்களாக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அவைத் தலைவரான என்னையே ஒரு தடவை கூட ஜெயலலிதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை.


ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். இதுவே அவரது எண்ணமாகும். அவரது ஆத்மா அங்கு தான் இருக்கிறது.

டி.டி.வி. தினகரன் ஒரு வழிப்பாதை போல, அவருக்கு எடுக்கதான் தெரியும் கொடுக்க தெரியாது. அதனால் தான் அவரால் செந்தில் பாலாஜியை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

ஆர்.கே. நகரில் எந்தவித பணியும் நடைபெறவில்லை. தொகுதி பக்கமே அவர் வரவில்லை. தேர்தலின் போது 20 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கி மக்களை ஏமாற்றிவிட்டார். தற்போது மக்களை சந்திக்க பயப்படுகிறார். வருகிற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #ApolloHospital #Madhusudhanan
Tags:    

Similar News