இந்தியா

2025 REWIND: 241 பேரின் உயிரை விழுங்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து

Published On 2025-12-22 21:57 IST   |   Update On 2025-12-22 21:57:00 IST
  • ​விமானம் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட மிகச் சில விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது.
  • விமான விபத்தில் மொத்தம் 260 பேர் பலியானார்கள்.

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு கருப்பு தினமாகும். இந்த விபத்தில் 241 உயிர்கள் பரிபோனது.

2025ம் ஆண்டு ஜூன் 12 அன்று மதியம் 1:39 மணியளவில், ஏர் இந்தியா போயிங் 787-8 டிரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே விபத்துக்குள்ளானது.


குஜராத்தின் அகமதாபாத் (சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்) முதல் லண்டன் (கேட்விக் விமான நிலையம்) வரை விமானம் புறப்பட்டது.

விமானம் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட மிகச் சில விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. சரியாக 32 விநாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. விமானம் விழுந்த வேகத்தில் அங்கிருந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்தது.

விமானத்தில் இருந்தவர்கள் மொத்தம் 242 பேர் (230 பயணிகள் + 12 ஊழியர்கள்). இதில் 241 பேர் உயிரிழந்தனர். அதிசயத்தக்க வகையில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார்.


தரையில் இருந்தவர்கள்: விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்ததால், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். அதன்படி, இந்த விபத்தில் மொத்தம் 260 பேர் பலியானார்கள்.

விமானம் புறப்பட்ட உடனேயே அதன் இரண்டு இன்ஜின்களுக்கும் செல்லும் எரிபொருள் விநியோகம் திடீரெனத் துண்டிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு இன்ஜின்களும் செயலிழந்ததால், விமானிகளால் விமானத்தை மீண்டும் ஓடுதளத்திற்குத் திருப்ப அல்லது அவசரமாகத் தரையிறக்க போதிய நேரம் கிடைக்கவில்லை.

இந்த விபத்து நவீன ரகமான 'டிரீம்லைனர்' விமானங்களின் பாதுகாப்பு குறித்து உலகளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

அகமதாபாத் நகரமே இந்த விபத்தினால் பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கின.

Tags:    

Similar News