இந்தியா

இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் யது கிரிஷ்.

20 இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாண வீடியோ எடுத்த வாலிபர் கைது

Published On 2026-02-21 15:37 IST   |   Update On 2026-02-21 15:37:00 IST
  • உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
  • இந்த விவகாரத்தில் யது கிரிசின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள், அதன் மூலம் தெரிந்தவர்கள்-தெரியாதவர்கள் என பலருடன் நட்பு வைத்துக்கொள்கிறார்கள். சமூக வலைதள பக்கங்களை பெரும்பாலானோர் நட்பு ரீதியாக பழகுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் சில மோசடி ஆசாமிகள், அதனை தங்களின் மோசடிக்கான தளமாக சமூகவலைதள பக்கங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அது போன்ற நபர்கள், தங்களின் சிந்தனைக்கு ஏற்ப பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

அப்படித்தான் கேரள மாநிலத்தில் ஒரு நபர், இன்ஸ்டாகிராமின் மூலம் கிடைத்த இளம்பெண்களுடன் நட்பை ஏற்படுத்தி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் தான்யம் பகுதியை சேர்ந்தவர் யது கிரிஷ்(வயது38). சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கும் அவருக்கு, அதன் மூலமாக ஏராளமான புதிய நண்பர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். அவர்களில் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என பல இளம்பெண்களும் அடங்குவர்.

அவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்ட யது கிரிஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனது வலையில் சிக்கவைத்து சீரழித்துள்ளார். தான் கூறும் ஆசை வார்த்தையில் ஏமாந்து பழகும் பெண்களை தனியாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதனை காண்பித்து மிரட்டி அந்த பெண்களுடன் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபடி இருந்திருக்கிறார். யது கிரிசின் வலையில் சிக்கி ஏமாந்த இளம்பெண்களில் 3பேர், அவரைப்பற்றி திருச்சூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் யது கிரிஷ் ஏராளமான இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

அவர் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி பழகிய 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்து, சம்பந்தப்பட்ட இளம்பெண்களை மிரட்டி பணமும் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து யது கிரிசின் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரின் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

யது கிரிஷ் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த 3 இளம்பெண்களிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். ஆனால் அவரிடம் சிக்கி ஏமாந்த மற்ற பெண்கள், அவமானத்துக்கு பயந்து புகார் அளிக்கவில்லை. ஆனால் அவர்களையும் கண்டுபிடித்து வாக்கு மூலம் பெறும் முயற்சியில் திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் யது கிரிசின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதில் அவர் பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் இருந்துள்ளன. அவற்றை போலீசார் தொழில்நுட்ப ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News