இந்தியா

பாகற்காயை சமைத்ததால் ஆத்திரம்: மதுபோதையில் தாயை அடித்து கொன்ற மகன்

Published On 2026-02-21 10:16 IST   |   Update On 2026-02-21 10:16:00 IST
  • அவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
  • அவருக்குப் பிடிக்காத உணவான பாகற்காய் சமைத்தது தொடர்பாக ஜெகதீஷ் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சந்திரபூர்:

மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் டோங்கர்கான் கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா பெட்குலே (65). இவரது மகன் ஜெகதீஷ் பெட்குலே (37). இவர் மதுபோதைக்கு அடிமையானவர்.

இதன் காரணமாக அவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஜெகதீஷ் தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் இரவு ஜெகதீஷ் மதுபோதையில் வீடு திரும்பினார். அவருக்குப் பிடிக்காத உணவான பாகற்காய் சமைத்தது தொடர்பாக ஜெகதீஷ் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் கடும் ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ் தனது தாய் என்றும் பாராமல் கொடூரமாக கையால் அடித்து தாக்கினார். இதில் சுமித்ரா பெட்குலே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ஜெகதீஷ் கிராமத்தில் சுற்றித் திரிந்து, தனது தாயைக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். அவர் போதையில் இருந்ததால் முதலில் அவரை நம்பாத கிராம மக்கள் பின்னர் சந்தேகம் அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது சுமித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைதொடர்ந்து ஜெகதீசை போலீசார் கைது செய்தனர். சுமித்ராவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News