செய்திகள்

மதுரையில் 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு

Published On 2018-10-31 11:00 GMT   |   Update On 2018-10-31 11:00 GMT
மதுரையில் 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை:

மதுரை சிம்மக்கல், வைகை தென்கரையைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 25). மொபைல் கடை நடத்தி வருகிறார்.

இவர் தனது மோட்டார் சைக்கிளை வைகை கரையோரம் இரவில் நிறுத்துவது வழக்கம். அந்தப்பகுதியைச் சேர்ந்த வேறு சிலரும் இதே போல் மோட்டார் சைக்கிள்களை அங்கு நிறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை ஒரு வாலிபர் 3 மோட்டார் சைக்கிள்களின் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர்.

இதனால் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். திலகர் திடல் போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தவர் அனுமார் கோவில் படித்துறையைச் சேர்ந்த ஜனார்த்தனன் (28) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News