செய்திகள்

ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

Published On 2018-10-22 06:14 GMT   |   Update On 2018-10-22 06:14 GMT
நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசியதற்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்டதையடுத்து, ஐகோர்ட்டில் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #HRaja #ContemptOfCourt #MadrasHC
சென்னை:

விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறை குறித்தும் நீதிமன்றம் குறித்தும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். அவரது பேச்சுக்கு கடும் விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. எச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

பின்னர், நீதிமன்ற அவமதிப்பு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து விசாரிக்க அதிகாரம் இல்லை என எச்.ராஜா தரப்பில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்  ரமானியிடம் முறையிடப்பட்டது. அவர் உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.


இந்நிலையில், எச்.ராஜா இன்று ஐகோர்ட்டில் ஆஜரானார். அவரது தரப்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாக எச்.ராஜா தெரிவித்திருந்தார்.

‘உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது தவறுதலாக சில வார்த்தைகளை கூறிவிட்டேன். இப்படி பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவறாக பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்’ என எச்.ராஜா கூறியிருந்தார்.

இதையடுத்து எச்.ராஜா மீதான அவதூறு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #HRaja #ContemptOfCourt #MadrasHC
Tags:    

Similar News