செய்திகள்

வேதாரண்யம் அருகே சுத்தியலால் தாக்கப்பட்ட தந்தை மரணம் - போலீசார் விசாரணை

Published On 2017-04-12 17:49 IST   |   Update On 2017-04-12 17:49:00 IST
வேதாரண்யம் அருகே சொத்து தகராறில் தாய்-தந்தையை சுத்தியலால் மகன் தாக்கிய சம்பவத்தில் தந்தையும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் ஓடாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 61). இவரது மனைவி கோகிலம் (வயது 55). இவர்களது மகன் முருகானந்தம் என்கிற முருகேசன் (42). இவர் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்துவிட்டு சொந்த ஊரில் இருந்து வருகிறார். இவர் அரசு வழங்கிய இலவச வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் தனது தாய்-தந்தையை அருகில் குடிசை போட்டுக்கொடுத்து தங்கவைத்து இருந்தார். இந்நிலையில் முருகேசனுக்கும் அவரது தாய்-தந்தைக்கும் வீடு சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்தாக கூறப்படுகிறது.

கடந்த 5-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் சுத்தியலால் முருகேசன் தனது தாய்-தந்தையை தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அன்றே கோகிலம் இறந்து விட்டார். ராமசாமி திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டி.எஸ்.பி. மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் விசாரணை மேற்கொண்டு முருகானந்தம் அவரது மனைவி மதியழகி (35), மாமனார் காளிமுத்து (62), மாமியார் ராசலெட்சுமி (58) ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.

இந்நிலையில் ராமசாமி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதையடுத்து போலீசார் தாய்-தந்தையை கொலை செய்த முருகேசன் மற்றும் அவரது மனைவி, மாமனார்-மாமியார் ஆகிய 4 பேரிடமும் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News