குழந்தை பராமரிப்பு

விருதுகள் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் தருமா?

Published On 2022-07-26 04:30 GMT   |   Update On 2022-07-26 04:30 GMT
  • குழந்தைகளை பாராட்டுவதை போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது.

ஒரு காலத்தில் பதக்கம், கேடயம், கோப்பை என்பவையெல்லாம் அரிதாக இருந்தன. அதனால், அந்தப் பரிசுகளுக்கே தனி மரியாதை இருந்தது. இப்போது போட்டியை நடத்துகிறவர்கள் வசூலிக்கும் பணத்தில் கால்வாசியை பரிசுகள் வாங்குவதில் செலவிடுகிறார்கள். இன்றைக்கு எல்லா குழந்தையுமே ஏதாவது பரிசை கட்டாயம் வாங்கிவிடும் என்று கூறும் வகையில் போட்டிகளை ரக வாரியாக பிரித்து நடத்துகிறார்கள்.

விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது என்பது உண்மைதான். இடைவிடாமல் பரிசுகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு அவை வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலை தருவதில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய திறமையை முழுதாக காட்டாமல் சுமாராக விளையாட வழிவகுத்து விடுகிறது. பெரியவர்கள் பாராட்டும்போது தங்களை திறமைசாலி, அறிவாளி என்று மன மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு, எதிலாவது தோல்வி ஏற்பட்டால் மனம் சோர்ந்து விடுகின்றனர்.

சமீபத்தில் ஆய்வாளர்கள் சில குழந்தைகளை அழைத்து படம் வரையச் சொல்லி அவர்களை கண்காணித்தனர். நல்ல புத்திசாலி, எந்தக் காரியத்தையும் நன்றாகச் செய்வான் என்றெல்லாம் தேவையில்லாமல் புகழப்பட்ட சிறுவர்கள் மற்றவர்களைவிட அதிக நேரம் ஓவியம் வரைய வேண்டிய பலகையையே பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் பார்க்கிறார்கள், தப்பில்லாமல் வரைய வேண்டுமே என்ற அச்சமே அவர்களுடைய தயக்கத்துக்கு காரணமாக இருந்தது.

ஒரு குழந்தைக்கு ஏதேனும் ஒரு விளையாட்டிலோ, கலையிலோ உண்மையான திறமை இருந்தால், அதை விளையாடுவதில் உள்ள இன்பமும் முடிவு எப்படி இருக்குமோ என்று இனம்புரியாத மர்மமும் அவர்களை நன்றாக திறமை காட்ட வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பதக்கமும், பரிசுகளும் அதற்கு தேவையே இல்லை. கலந்து கொண்டாலே ஒரு பரிசு நிச்சயம் என்றால், முன்னேற்றத்துக்கு அங்கே என்ன இருக்கும்? தாண்டுவதற்கு தடைகளே இல்லை எனும்போது, எதற்காக மண்டையை போட்டுக் குடைந்துகொள்ள வேண்டும் என்ற மெத்தனம் வந்து விடும்.

குழந்தைகளை வளர்க்கும்போது பாராட்டுவதை போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் தண்டித்துவிடக் கூடாது. தவறு செய்தால் சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். தவறு ஏன் நடந்தது என்று ஆராயாமல் தண்டிக்க கூடாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அதை உணர்ச்சி வசப்பட்டு செய்தார்களா, சூழல் காரணமா, வெளிக் காரணம் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணம், செயல்பாடு இருந்தால் சுட்டிக்காட்டி அதை மாற்ற வேண்டும்.

தவறு செய்தால் தவறு செய்தவர்களை மட்டும் தண்டித்து திருத்தும் நாம், பாராட்டும்போது எல்லோரையும் பாராட்டுவது சரியல்ல. அது அவர்களுடைய வளர்ச்சிக்கு உதவாது. நன்றாக செயல்பட்டார்களோ இல்லையோ எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க எல்லோருக்கும் பரிசு தர வேண்டும் என்ற மனப்பான்மை சரியல்ல.

Tags:    

Similar News