வழிபாடு

நாகூர் தர்கா கந்தூரி விழா: சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்

Published On 2023-12-24 05:09 GMT   |   Update On 2023-12-24 05:09 GMT
  • ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
  • சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வருவதால் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 467-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து தொடங்கியது.

தொடர்ந்து, சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்ன ரதம் உள்ளிட்ட அலங்கார ரதங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனக்கூடு ஊர்வலம் சென்று இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைந்தது.

கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு, சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளுள் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார்.

நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சந்தனக்கூடு ஊர்வலத்தை யொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நாகை நகரமே விழாக்கோலம் பூண்டது. நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News