நாளை அதிர்ஷ்டகரமான நாள் - காரிய வெற்றி தரும் மாசி பூசம் வழிபாடு
- பூச நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக அரச மரம் இருக்கிறது.
- பூச நட்சத்திரத்தின் அதிதேவதையான குரு பகவானை வழிபடுவது குரு தோஷங்களை நீக்கும்.
தமிழ் மாதங்களில் 11-வது மாதமாக அமைவது மாசி மாதம் ஆகும். சூரியன் கும்ப ராசியில் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 48 நொடி, 24 விநாடி கொண்ட கால அளவே இந்த மாதமாகும். புராணங்களின் படி, மாசி மாதம் வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது.
பொதுவாக, ஒவ்வொரு மாதத்திலும் வரும் திதி, நட்சத்திரம், நாள் மட்டும்தான் சிறப்பு பெறும். ஆனால், மாசி மாதத்தில் வரும் அனைத்து நாட்களுமே ஒவ்வொரு வகையிலும் சிறப்பினைக் கொண்டுள்ளது. இந்த மாதத்தில் வரும் அனைத்து விரத நாட்களும் சிறப்பான பலன்களை தரக் கூடியதாகும். அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற மாதமாகவும் மாசி மாதம் கருதப்படுகிறது.
மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக் குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம். முருகப் பெருமானை தகப்பன் சுவாமி என அழைக்கிறோம். அப்படி முருகப் பெருமான், தனது தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்தது மாசி மாத பூசம் நட்சத்திர நாளில் தான்.
அதனால் தான் மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது, உயர்கல்வி தொடங்குதல் போன்றவை செய்யப்படுகின்றன. இதன் மூலம் அந்தத் துறைகளில், எடுத்துக்கொண்ட கல்வியில் மிகப்பெரிய உச்சம் தொடலாம் என்பது நம்பிக்கை. தை மாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் தெய்வ அருள் பெற்ற நட்சத்திர நாளாகும். அன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. அதே போல மாசி பூசம் முருகனின் துணைவி தெய்வானைக்குரியது. அம்மையிடம் வரம் கேட்டால் அப்பனும் சேர்ந்து தருவார் அல்லவா. அந்த வகையில் மாசி பூசமும் தெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாள்.
மாசி பூசம் நாளான நாளை அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாள் மற்றும் லட்சுமி தேவிக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவதால் சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி விரும்பிய பலன்களை உண்டாக்கும். பூச நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக அரச மரம் இருக்கிறது. அரசமரம் தலவிருட்சமாக இருக்கும் கோவிலுக்கு சென்று அரசமரத்தையும் அங்குள்ள இறைவனையும் வழிபடுவதால் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் ஏற்படுத்தும்.
இந்த ஆண்டு மாசி மாத பூசம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி 34 நிமிடம் 58 நொடிகளில் தொடங்குகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி 34 நிமிடம் 18 நொடிகளில் நிறைவடைகிறது. பூசம் சனியின் ஆதிக்க நட்சத்திரம் என்பதால், திருநள்ளாறு போன்ற சனி தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விளங்குளம் அட்சய புரீஸ்வரர் கோவில் பூச நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய முக்கிய தலம் ஆகும். பூச நட்சத்திரத்தின் அதிதேவதையான குரு பகவானை வழிபடுவது குரு தோஷங்களை நீக்கும்.
பூசம் என்பதன் வடிவங்கள் மகுடி, புற்று, அம்பு கூடை, முருகனின் வேல், மயில்தோகை கொத்து, பசுவின் மடி. கோமாதா. ஆகவே மேற்கண்ட வடிவம் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்க கூடிய தெய்வம் அல்லது மகான் அல்லது அந்த ரூபங்களையே நாம் வழிபாடு செய்வதும் தினமும் பார்த்து தியானம் செய்து வருவதும் நமக்கு நல்ல வழிகாட்டுதலை, நல்ல சிந்தனையும், யோசிக்கும் திறனையும், ஆற்றலையும் நமக்கு கொடுக்கும்.
மாசி பூசம் நட்சத்திர நாளான நாளை புட்லூரில் இருக்கும் பூங்காவனத்தம்மன், சங்கரன் கோவிலில் இருக்கும் கோமதியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், மலேசியா பத்துமலை முருகன் கோவில், அறுபடை வீடு முருகன் கோவில்கள், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி வழிபடுவது சிறப்பாகும். மாசி பூச வழிபாடு மிகச்சிறந்த நேர்மறை எண்ணங்களை கொடுத்து உங்களுக்கு வாழ்வில் வெற்றியை பெற உதவும்.