வழிபாடு

பரமபத வாசல் திறப்பின் வரலாறு

Published On 2023-12-21 04:34 GMT   |   Update On 2023-12-21 04:34 GMT
  • சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் வரும் 23-ந்தேதி அதிகாலை.
  • திருவரங்கம் பூலோக வைகுண்டமாய் ஜொலிக்கும் என்பது சிறப்பு.

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் வரும் 23-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. வைண்ட ஏகாதசி விழா பகல் பத்து, ராத்திரி பத்து என்று தொடர்ந்து 21 நாள்கள் நடைபெறும். அப்போது திருவரங்கம் பூலோக வைகுண்டமாய் ஜொலிக்கும் என்பது சிறப்பு.

வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாளாக திருநெடுந்தண்டகத்துடன் தொடங்கும். நான்முகனுக்கு உண்டான அகங்காரத்தை ஒடுக்க நினைத்த திருமால், தன் காதுகளில் இருந்து மது, கைடபர்களை வெளிப்படச் செய்தார். அவர்கள் நான்முகனைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த திருமால், பிரம்மாவை காப்பாற்றி, அசுரர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகக் கூறினார்.

அப்போது அந்த அசுரர்கள் திருமாலுக்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாக ஆணவத்துடன் கூறினர். திருமாலும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அவ்வாறே அசுரர்களை வதமும் செய்தார். அப்போது ``பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்" என்ற வரத்தை அசுரர்கள் கேட்டனர்.

அதன்படி, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலாம் சொர்க்கவாசல் திறந்து, அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக் கொண்டார் திருமால். அசுரர்கள் பெற்ற முக்தியை அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ``பெருமாளே! தங்களது அர்ச்சாவதாரம் விளங்கும் சகல ஆலயங்களிலும் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, சொர்க்க வாசல் திறக்கப்பட வேண்டும்.

அப்போது அந்த வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் பரமபத மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர் அசுரர். தீனகருணாகரனான திருமாலும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். இதுவே வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும் ஐதீகத்தின் திருக்கதை.

Tags:    

Similar News