கிரிக்கெட் (Cricket)

'ஒவ்வொரு வீரருக்கும் மரியாதை உண்டு' - LSG உரிமையாளரை கடிந்துகொண்ட ஷமி

Published On 2024-05-11 12:34 IST   |   Update On 2024-05-11 12:34:00 IST
  • உரையாடல்களை டிரஸ்ஸிங் ரூம் அல்லது ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் செய்திருந்தால் கூட பரவாயில்லை.
  • களத்தில் கோடிக்கணக்கானோர் முன்னிலையில் அவர் தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கடந்த 8-ந்தேதி நடைபெற்ற 57-வது ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, ஐதராபாத் அணியுடனான தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டனான கே.எல்.ராகுலிடம் கடிந்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோவை பார்த்த பலரும், டிரெஸிங் அறையில் நடக்க வேண்டிய விவாதங்கள் பொதுவெளியில் நடக்கிறது. சஞ்சீவ் கோயங்கா செய்தது சரியான செயல் அல்ல என்றும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதே போல் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு தற்போது காயத்தால் ஓய்வில் உள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

வீரர்களுக்கு மரியாதை உண்டு, உரிமையாளராக நீங்களும் மரியாதைக்குரிய நபர். பலர் உங்களைப் பார்த்து உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். இவையெல்லாம் கேமராக்களுக்கு முன்னால் நடந்தால்... அது வெட்கக்கேடான விஷயம். இதுபோன்ற உரையாடல்களை டிரஸ்ஸிங் ரூம் அல்லது ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் செய்திருந்தால் கூட பரவாயில்லை. களத்தில் கோடிக்கணக்கானோர் முன்னிலையில் அவர் தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது? இப்படி நடந்து கொண்டதன் மூலம் நீங்கள் ஒன்றும் செங்கோட்டையில் கொடி ஏற்றி விடவில்லை என்றார்.

Tags:    

Similar News