முசோரியில் நாளை திருமணம்: நீண்டநாள் தோழியை கரம்பிடிக்கும் குல்தீப் யாதவ்
- இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் 4, 2025 அன்று லக்னோவில் மிக எளிமையாக நடைபெற்றது.
- உண்மையில் இவர்களது திருமணம் நவம்பர் 2025-லேயே நடைபெறவிருந்தது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பெற்றிருந்தார். அவர் நாளை இல்லற வாழ்க்கையில் இணைய உள்ளார். அதன்படி குல்தீப் யாதவ் தனது நீண்ட கால தோழியான வான்ஷிகாவை கரம் பிடிக்க உள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் 4, 2025 அன்று லக்னோவில் மிக எளிமையாக நடைபெற்றது.
உண்மையில் இவர்களது திருமணம் நவம்பர் 2025-லேயே நடைபெறவிருந்தது. ஆனால், டி20 உலகக்கோப்பை தொடரில் குல்தீப் கவனம் செலுத்த வேண்டி இருந்ததால், திருமணம் தற்போது ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
வான்ஷிகா, குல்தீப் யாதவின் சிறுவயது தோழி ஆவார். இவர்கள் இருவரும் கான்பூரைச் சேர்ந்தவர்கள். வன்ஷிகா தற்போது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார்.
மார்ச் 17-ந் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி (Reception) நடைபெற உள்ளது.
இதில் பிசிசிஐ அதிகாரிகள், ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.