கிரிக்கெட்

கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ்

முதல் டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா

Published On 2022-09-28 16:52 GMT   |   Update On 2022-09-28 16:52 GMT
  • முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது
  • கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் இருவரும் கடைசி வரை நிலைத்து நின்று வெற்றியை உறுதி செய்தனர்

திருவனந்தபுரம்:

இந்தியா-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 9 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்கா பின்னர் ஒரு வழியாக 100 ரன்னை கடந்தது. 20 ஓவர் முடிவில 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேசவ் மகராஜ் 41 ரன்கள் சேர்த்தார்.

இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தீபக் சாகர், ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி 3 ரன்னில் நடையை கட்டினார்.

அதன்பின்னர் கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் இருவரும், கடைசி வரை நிலைத்து நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், கே.எல்.ராகுல் 51 ரன்களும் சேர்க்க, இந்தியா 20 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்ததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. 

Tags:    

Similar News