கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 பேர் கொண்ட அணியை இன்னும் முடிவு செய்யவில்லை- கேஎல் ராகுல்

Published On 2023-02-08 04:58 GMT   |   Update On 2023-02-08 04:58 GMT
  • சொந்த மண்ணில் விளையாடுவதால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதற்கான ஆசை இருக்கிறது.
  • இந்திய ஆடுகளங்களில் ரிவர்ஸ் ஸ்விங் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

நாக்பூர்:

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் நாக்பூரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் கடந்த சில நாட்களாக நாக்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய பயிற்சிக்கு பின்னர் இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது:-

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இது ஒரு கடினமான முடிவாக இருக்கும். மிகச்சிறப்பாக விளையாடி உள்ள வீரர்கள் அணியில் உள்ளனர். சில இடங்களுக்கான வீரர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

வீரர்களிடம் பேசப்பட்டு வருகிறது. நாக்பூர் ஆடுகளத்தை நாங்கள் பார்வையிட்டோம். ஆனால் ஆடுகளம் என்ன மாதிரி செயல்படும் என்பதை இப்போதே கணித்து கூறுவது கடினம். ஆடுகளம் எந்த வகையில் செயல்படும் என்பதை போட்டி நாளில் தான் அறிய முடியும். ஆடுகளம் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படும் என்று யூகிக்க முடியும். ஆனால் ஆடுகளங்களைப் அறிந்துகொள்ள முடியாது.

சொந்த மண்ணில் விளையாடுவதால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதற்கான ஆசை இருக்கிறது. ஆட்டத்தின் நாள் அல்லது ஆட்டத்திற்கு முந்தைய நாள் இதுதொடர்பான முடிவை எடுப்போம். பேட்டிங்கில் நான் நடுவரிசையில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால் அதை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன்.

அணிக்காக நான் ஏற்கெனவே அதை செய்துள்ளேன். யார் வேண்டுமானாலும் போட்டியின் நாளில் வெற்றி தேடிக்கொடுக்கக் கூடியவராக மாறலாம். அணிக்கும், குறிப்பிட்ட டெஸ்ட் போட்டிக்கும் எது சிறந்தது என்பதை கருத்தில் கொண்டே விளையாடும் 11 பேர் கொண்ட அணி முடிவு செய்யப்படும்.

கடந்த இரு ஆண்டுகளாக நாங்கள் இதை செய்துள்ளோம். அணியில் உள்ள வீரர்கள் ஏன் விளையாடும் 11 பேர் அணியில் இருக்கிறோம். ஏன் இல்லை, தங்களுக்கான பணி அணியில் என்ன என்பதில் அனைவரும் தெளிவாக உள்ளனர். இந்திய ஆடுகளங்களில் ரிவர்ஸ் ஸ்விங் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு கே.எல்.ராகுல் கூறினார்.

Tags:    

Similar News