கிரிக்கெட் (Cricket)

கான்வே, ராயுடு இல்லை.. சிஎஸ்கே-வின் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும்.. மைக்ஹஸ்சி பதில்

Published On 2024-03-19 14:54 IST   |   Update On 2024-03-19 14:54:00 IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார்.
  • கடந்த ஆண்டு ரகானே சிறப்பாக விளையாடினார். அவரை தொடக்க வீரராக களம் இறக்கலாம்.

சென்னை:

குருநானக் கல்லூரி சார்பில் பவித்சிங் நாயர் நினைவு 10-வது அகில இந்திய கல்லூரிகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. 23-ந்தேதி வரை நடக்கும் இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்கின்றன.

இந்த போட்டித் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார். சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா இடம் பெற்றுள்ளார். அவர் கான்வே போலவே விளையாடக் கூடியவர்.

கடந்த ஆண்டு ரகானே சிறப்பாக விளையாடினார். அவரை தொடக்க வீரராக களம் இறக்கலாம். கெய்க்வாட்டுடன் தொடக்க வீரராக களம் இறங்க ரவீந்திரா அல்லது ரகானே உள்ளனர்.

ஆனால் அதை நான் உறுதியாக கூற முடியாது. கேப்டனும், பயிற்சியாளரும் முடிவு செய்வார்கள். அம்பத்தி ராயுடு இடத்தில் புதுமுக வீரர் சமீர் ரிஸ்வி இடம் பெற வாய்ப்பு உள்ளது.

ரிஸ்வி தற்போது தான் ஐ.பி.எல். கேரியரை தொடங்க உள்ளார். எனவே அம்பத்தி ராயுடு பல வருடங்களாக செய்ததை அவர் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆனால் கண்டிப்பாக அவரை நாங்கள் முன்னேற்றுவதற்கான வேலைகளை தொடங்கியுள்ளோம்.

அவரிடம் இயற்கையாக திறன் இருக்கிறது. எனவே இது எந்த அளவுக்கு செல்கிறது என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளோம். பந்தை அதிரடியாக எதிர்கொள்ளக் கூடிய அவர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார் என்று நினைக்கிறேன்.திறமையுடைய இளம் வீரராக தெரியும் அவருடன் இணைந்து வேலை செய்ய உள்ளேன். அவருக்கு இந்தத் தொடரிலும் வருங்காலங்களிலும் அசத்துவதற்கு தேவையான முன்னேற்றத்தை பேட்டிங்கில் காண்பதற்கு உதவ உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News