கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோகித் விளையாட வேண்டும்: லாரா

Published On 2023-11-27 06:45 GMT   |   Update On 2023-11-27 06:45 GMT
  • ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு இருவரும் டி20-யில் விளையாடவில்லை.
  • அடுத்த ஆண்டு வெஸ்ட்இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கும் உலகக் கோப்பையில் அவர்கள் இடம் பிடிப்பார்களா? என்பது கேள்வி.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 3-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் 55 ஆட்டங்களை கொண்டது.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் (50 ஓவர்) இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. அபாரமாக விளையாடி முக்கியமான ஆட்டத்தில் தோல்வி ஏற்படுவது சில சமயங்களில் நடக்கும்.

விராட் கோலி, ரோகித் சர்மா அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களது அனுபவத்துக்கு மாற்று இல்லை. வெஸ்ட்இண்டீஸ் ஆடுகளங்களை நன்கு அறிந்தவர்கள். சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இதனால் 20 ஓவர் உலக கோப்பையில் அவர்கள் விளையாட வேண்டும். அவர்களை அணியில் சேர்க்க வேண்டும்.

இந்தியா எந்த அணியை தேர்வு செய்தாலும் ஒரு வலிமையான சக்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் கோலியும், ரோகித் சர்மாவும் ஜாம்பவான்கள். அவர்களை எளிதில் நிராகரித்துவிட இயலாது.

இவ்வாறு லாரா கூறியுள்ளார்.

இந்திய அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை அரைஇறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்தப் போட்டியில் இருந்து ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் அளவில் இடம் பெறவில்லை.

ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட இளம் வீரர்களை கொண்டு 20 ஓவர் அணி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News