அபிஷேக் சர்மா இப்படியா? ஆச்சர்யமாக இருந்தது என்கிறார் கவாஸ்கர்
- அபிஷேக் சர்மா எப்படி சிறந்த பேட்ஸ்மேன் என்பது நமக்குத் தெரியும்.
- ஜிம்பாப்வே அணிக்கெதிராக 55 ரன்கள் அடித்து விமர்சித்தவர்களை அமைதியாக்கிவிட்டார்.
டி20 உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மாவுக்கு நினைத்தபடி சரியான தொடக்கம் அமையவில்லை. குரூப் சுற்று லீக் போட்டிகள் மூன்றிலும் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான குரூப் 8 சுற்று போட்டியில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கெதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடி 30 பந்தில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 55 ரன்கள் விளாசினார். அபிஷேக் சர்மா மீண்டும் ஃபார்ம்-க்கு வந்தது அணி மற்றும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அபிஷேக் சர்மாவின் பாதுகாப்பு ஆட்டம் பார்ப்பதற்கு ஆச்சர்யம் அளித்தது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவாஸ்கர் கூறுகையில் "அபிஷேக் சர்மா எப்படி சிறந்த பேட்ஸ்மேன் என்பது நமக்குத் தெரியும். ஜிம்பாப்வே அணிக்கெதிராக 55 ரன்கள் அடித்து விமர்சித்தவர்களை அமைதியாக்கிவிட்டார்.
அவருடைய இன்னிங்சை தொடங்க கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார். அவரது பேட்டிங்கில் ஒரு முறை இருந்தது. ஆஃப் ஸ்பின்னர்களுக்கு மரியாதை கொடுத்து, ரிஸ்க் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த போட்டியில் பாதுகாப்பான ஷாட்களை விளையாடினார். பந்தை தடுத்தாடினார். இதை பார்ப்பதற்கு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் வழக்கமாக இவ்வாறு விளையாடமாட்டார்.
இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.