சினிமா

பூஜையுடன் துவங்கிய கார்த்தியின் அடுத்த படம்

Published On 2019-04-29 03:30 GMT   |   Update On 2019-04-29 03:30 GMT
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா - சத்யராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோவாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. #Karthi #Jyothika #Sathyaraj
வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கும் இந்த படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாபாத்திரத்தில் நடிக்க, அன்சன் பால் வில்லனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பூஜையுடன் துவங்கியது. அங்கு 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

திகில், அதிரடி, குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பது குறித்து கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல் முறையாக அண்ணியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சத்யராஜ் இந்த படத்தில் சேர்ந்து இருப்பது மிகப்பெரிய பலம். அனைவரின் ஆசிர்வாதத்துடன் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.


நடிகர் சூர்யாவும் “இது ஒரு சிறப்பான தருணம். உன்னையும் ஜோதிகாவையும் திரையில் ஒன்றாக பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்து உள்ளார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Karthi #Jyothika #Sathyaraj

Tags:    

Similar News