என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்பு வேட்பாளர்கள்
மிகவும் எதிர்பார்ப்புடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்த தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி, இன்று வெளியான தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடைந்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்று என கூறிய அந்த கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெற முடியவில்லை.
தேர்தல் தோல்வி தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும்.
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. வேட்பாளர்கள் வினோத் (தி.நகர்) தி.இரா. சகாதேவன் (சைதாப்பேட்டை) ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–
சென்னை வெள்ளத்தில் பா.ம.க. ஆற்றிய பணிகளை மக்கள் பாராட்டுகிறார்கள். நாம் விரும்பும் சென்னை எப்படி இருக்க வேண்டும்? அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அன்புமணி திட்டம் தீட்டி உள்ளார்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணா கற்றுக் கொடுத்ததை இரு திராவிட கட்சிகளும் கைவிட்டு விட்டன. கண்ணியமான அரசியல், முன்னேற்றத்துக்கான அரசியல் பற்றி அன்புமணி பேசுகிறார். இப்படி ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தாரா? என்று மக்கள் பாராட்டும் அளவுக்கு அன்புமணி பேசி வருகிறார்.
மதுவை கொடுத்து மக்களை சீரழித்துவிட்டது திராவிட கட்சிகள். எங்கும் ஊழல் மலிந்துவிட்டது. புரையோடிப்போன இந்த புண்ணை குணமாக்க மருத்துவர் அன்புமணியால் தான் முடியும்.
இரு திராவிட கட்சிகளையும் மக்கள் ஒதுக்கி விட்டார்கள். இளைஞர்கள் எங்களை தனியாக நிற்க வற்புறுத்தினார்கள். இப்போது பெருகி வரும் ஆதரவை பார்க்கிறேன். 200 தொகுதிகளுக்கு மேல் பா.ம.க. கைப்பற்றி ஆட்சியை பிடிக்கப்போவது உறுதி.
சென்னையில் உள்ள 22 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றுவோம். ‘மாம்பழம்’ சின்னத்துக்கு வாக்களித்து மாற்றத்தை தாருங்கள். முன்னேற்றத்தை நாங்கள் தருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேட்பாளர்கள் சுப்பிரமணி (வில்லிவாக்கம்), அகிலேஷ் (அண்ணாநகர்), குமார் (விருகம்பாக்கம்), வினோபா (வேளச்சேரி) மற்றும் ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், கன்னியப்பன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
5 முறை ஆண்ட தி.மு.க.வும், 3 முறை ஆண்ட அ.தி.மு.க.வும் கடந்த காலத்தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் அவர்கள் வெளியிட்ட வாக்குறுதிகளை முழுமையாக இரு கட்சிகளும் நிறைவேற்றியிருந்தாலே மக்கள் நல கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.
தற்போது கூட தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் உள்ளன. அவற்றை எல்லாம் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற அதிகார போதையில் இரு கட்சிகளும் தள்ளாடுகின்றன. எனவே தான், கடந்த காலங்களில் என்ன வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் கொடுத்தார்களோ அதையே திரும்பத்திரும்ப ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகளாக வெளியிட்டு வருகின்றனர். அப்படி என்றால், அவற்றை எல்லாம் நிறைவேற்றவில்லை என்றுதானே அர்த்தம்.
தற்போது, அவர்கள் கொடுக்கும் பொய்யான, கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. அதிகார போதையில் தள்ளாடும் இரு கட்சிகளுக்கும் மக்கள் தங்கள் மவுனப் புரட்சியின் மூலம் பாடம் கற்பிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரக்கோணத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
ஏழை மக்களின் தரம் உயர்வதற்கு பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்காக அனைவருக்கும் தரமான கல்வியை அ.தி.மு.க. அரசு வழங்கி உள்ளது. மாணவர்களின் கல்வித்தரம் உயர தொடர்ந்து வழிவகை காணப்படும்.
கல்வி வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. பள்ளிக்கல்வியில் தமிழகம் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாணவர்கள் நலன் குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்படவில்லை. வெற்று வாக்குறுதிகளே உள்ளன. தி.மு.க. ஆட்சியின்போது மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் தனியாருக்கு மட்டுமே பயன் கிடைத்தது. தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. தி.மு.க. திட்டத்தை விட எங்களின் திட்டமே சிறந்தது.
அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசால் தாமதம் ஏற்பட்டது. வேலூர் கூட்டு குடிநீர் திடடம் அ.தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர்.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்று பொருள். எங்கு பார்த்தாலும் ஊழல் மயம். ஊழலையே தொழிலாக கொண்டுள்ளது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி. மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி. எனவே, இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வரும்போது அவர்களை வாக்காளர்கள் விரட்டியடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நேற்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்து வேன் மூலம் புறப்பட்டு மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், விருகம்பாக்கம், தி.நகர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
மயிலாப்பூர் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜனை ஆதரித்து சிட்டி சென்டர் அருகிலும், வேளச்சேரி தி.மு.க. வேட்பாளர் நடிகர் சந்திரசேகரை ஆதரித்து திருவான்மியூரிலும், சோழிங்கநல்லூர் தி.மு.க. வேட்பாளர் அரவிந்த் ரமேசை ஆதரித்து மேடவாக்கத்திலும், தாம்பரம் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து தாம்பரம் பஸ் நிலையத்திலும் பிரசாரம் செய்தார்.
இரவு 8.10 மணிக்கு பல்லாவரம் தி.மு.க. வேட்பாளர் இ.கருணாநிதியை ஆதரித்து பல்லாவரம் பஸ் நிலையம் அருகிலும் ஆலந்தூர் தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து ஆலந்தூர் எம்.கே.என். சாலையிலும் வேன் பிரசாரம் செய்தார்.
இரவு 8.40 மணிக்கு விருகை தொகுதி தி.மு.க. வேட்பாளர் க.தனசேகரனை ஆதரித்து சாலிகிராமம் தசரதபுரம் பஸ் நிலையம் அருகிலும், தி.நகர் வேட்பாளர் டாக்டர் கனிமொழியை ஆதரித்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் அருகிலும் பேசினார்.
பிரசாரத்தில் கருணாநிதி பேசியதாவது:–
நாடு வாழ, நல்லாட்சி மலர உங்கள் அன்பான ஆதரவை தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் படிந்துள்ள இருள் விலக, தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ நீங்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்த ஆட்சியில் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும். இந்த ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
உங்கள் கைகளில் தான், தமிழ்நாட்டின் எதிர் காலம் இருக்கிறது. அந்த எதிர்காலத்தை எழில் காலமாக மாற்றி அமைத்து, திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஒன்றான, சமத்துவம், சமதர்மம், மதச்சார்பற்ற தன்மை, இவைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் அளித்து, இளைஞர்கள் எழுச்சி பெறவும், வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு நன்மை, தாய்மார்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளில் இருந்து விடுதலை– இவைகளை நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பை நம்முடைய கழகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
தி.மு.க. ஆட்சி ஏற்கனவே நடைபெற்ற கழக ஆட்சியில் எத்தகைய சாதனைகள் நடைபெற்றன என்பது உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட கழக ஆட்சி மீண்டும் நடைபெற உங்களுடைய அன்பான ஆதரவு தேவை. எதிர் காலம் இளைஞர்களுடைய கைகளிலேதான் இருக்கிறது.
தி.மு.க. இந்த தேர்தலில் பெரு வெற்றியை பெறும் என்று தமிழ்நாட்டில் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த மக்களில் நீங்களும் இருக்கிறீர்கள்.
எனவே இளைஞர்களாகிய நீங்கள், இதே ஆர்வத்தை தொடர்ந்து காட்டி, அக்கறையில்லாமல் அவசரத்துக்கு ஆளாகி கோட்டை விட்டு விடாமல், கழகத்தின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
மாலை 6 மணிக்கு வேன் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி இரவு 10 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்தார்.
குரோம்பேட்டை பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி ஆகிய இடங்களில் கடும் வாகன நெரிசலில் கருணாநிதியின் கார் போக முடியாமல் 15 நிமிட நேரம் சிக்கிக் கொண்டது.
அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏராளமான இளைஞர்களும், பெண்களும் தங்களது மொபைல் போன்கள் மூலம், வாகனத்தின் வெளிச்சத்தில் கருணாநிதியை போட்டி போட்டு படம் எடுத்து மகிழ்ந்தனர்.
சென்னை:
பாரதீய ஜனதா தமிழக தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரி முதல்வரை சந்தித்தார். அப்போது பாரதிதாசன் குடி யிருப்பு பகுதி மக்களின் கோரிக்கை மனுவை நிறை வேற்ற வற்புறுத்தியதோடு மத்திய தொழிலாளர் துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா நடவடிக்கை எடுக்க அவருக்கு கடிதம் அனுப்பினார்.
மேலும் தமிழிசை குடியிருப்பு பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தபோது, “கடந்த 5 ஆண்டுகளாக அ.தி. மு.க. அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டதால், பெண்களின் வாழ்க்கை இருண்டு விட்டது. வீட்டில் குடிகாரர்களின் தொல்லையால் பல கொலைகளும், தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன.
பெண்களுக்கு துரோகம் செய்த அ.தி.மு.க. அரசை வீட் டுக்கு அனுப்புவோம். கல்லூரி மாணவர்கள் தொடங்கி, பள்ளி மாணவர்கள் வரை பலரும் மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள்.
என்னை நீங்கள் தேர்வு செய்தால் மது என்னும் அரக்கனை உடனடியாக ஒழித்துக் கட்டுவேன். பெண்கள் நிம்மதி யோடு வாழ அனைத்து நட வடிக்கைகளை எடுப்பேன்” என்று பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.
தற்போது ஜெயலலிதா தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு கடந்த 25-ந் தேதி வந்திருந்தார். அப்போது அவருக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வேன் மூலம் புறப்பட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று தனக்கு ஆதரவு திரட்டுகிறார்.
தொகுதிக்கு தான் செயல்படுத்திய நலத்திட்டங்களையும், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களையும் எடுத்துரைத்து ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு வாக்குகள் சேகரிக்க உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தலில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம், கொருக்குப்பேட்டை உள்பட இடங்களில் ஜெயலலிதா திறந்தவேனில் பேசி வாக்குகள் சேகரித்தார்.
தற்போது அதே இடங்களில் ஜெயலலிதா மீண்டும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் ஜெயலலிதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் அவருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பிரசாரம் செய்வதற்காக ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதிக்கு வர உள்ளதையடுத்து, அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு மேள-தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கவும் தற்போதே தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா தனது சூறாவளி பிரசாரத்தை கடந்த மாதம் 9-ந் தேதி சென்னை தீவுத்திடலில் தொடங்கி, விருத்தாசலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சீபுரம், சேலம், திருச்சி, புதுச்சேரி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நிறைவு செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் பொதுக் கூட்டத்தின் வாயிலாக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா வாக்குகள் சேகரிக்க உள்ளார். தொடர்ந்து 8-ந் தேதி தஞ்சாவூரிலும், 10-ந் தேதி வேலூரிலும், 12-ந் தேதி நெல்லையிலும் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.
கோவை:
தமிழக சட்டசபைக்கு வருகிற 16–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார்.
கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கேரள மாநிலத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.
இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பொதுக் கூட்ட மைதானத்துக்கு வந்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். கூட்டம் முடிந்ததும் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை செல்கிறார்.
பொதுக்கூட்டத்தை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு எதிரே சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவையில் மதியம் முதலே தொண்டர்கள் திரண்ட வண்ணம் இருந்தனர்.
பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து ஜெயலலிதா வரும் பாதை, மேடை அமைந்துள்ள இடம், பொதுக் கூட்ட மைதானம் ஆகிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் 5 ஐ.ஜி.க்கள் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் மே 16–ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்–அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
விழுப்புரத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், வானூர், மயிலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், ஆகிய 11 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களையும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ் பெண்ணாத்தூர் ஆகிய 2 சட்டசபை தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதையொட்டி விழுப்புரம் ஜானகிபுரம் புற வழிச்சாலையில் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா மதியம் 3 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழுப்புரம் வருகிறார். அங்கு அவர் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு கீழ்பகுதியில் ஆண்கள் அமர தனியாகவும், பெண்கள் அமர தனியாகவும் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. நெரிசல் ஏற்படாமல் தடுக்க ஆங்காங்கே தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டுள்ளன.
கூட்டத்திற்கு விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், கடலூர், பெரம்பலூர், விழுப்புரம், ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அங்கிருந்து ஊர்வலமாக வந்து உளுந்தூர்பேட்டை பஸ்நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
இந்த தொகுதி மக்களின் கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும். பல முறை இந்த தொகுதியில் நிற்குமாறு கேட்டீர்கள். ஒவ்வொரு முறையும் என்னை பல தொகுதிகளிலும் போட்டியிடுமாறு மக்கள் கேட்டு வருகின்றனர்.
தற்போது நான் இங்கு போட்டியிடுகிறேன். இந்த தொகுதி மக்களுக்காக நான் பாடுபடுவேன். இங்குள்ள மக்கள் கல்லூரி கட்டித்தரவேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
எனவே கல்லூரி கட்டி தருவேன், உளுந்தூர்பேட்டை மைய பகுதியில் உள்ளது. அதிகமாக விபத்துகள் நடக்கிறது. எனவே இங்கு உலக தரம் வாய்ந்த மருத்துவமனையை கட்டித்தருவேன். உங்கள் குறைகளை தீர்க்க பாடுபடுவேன். திரும்ப திரும்ப கருணாநிதி, ஜெயலலிதாவை குறை கூற என்ன இருக்கிறது.
முடியட்டும் விடியட்டும், முடியட்டும் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சி, விடியட்டும் தமிழ்நாடு. தமிழகம் முழுவதும்நான் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே தொண்டர்கள், கூட்டணி கட்சி தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் எனது வெற்றிக்காக பாடுபட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றிபெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.