என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • எப்போது வெறுப்புணர்வு இயல்பான ஒன்றாக மாற்றப்படுகிறதோ, அரசியல் லாபத்திற்காக ஒருவரின் அடையாளம் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அப்போது வன்முறை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது
    • தமிழ்நாட்டினால் இந்த ஒழுக்க மற்றும் நிர்வாக வீழ்ச்சியை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது

    தமிழ்நாட்டில் வடமாநில இளைஞர்கள் மீது தொடரும் தாக்குதல் சம்பவங்களுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

    "மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியான சுராஜ், கோயம்புத்தூரில் வாகனம் மோதியதை தட்டிக் கேட்டதற்காக நேற்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பணியாற்றி வரும் ஒடிசாவைச் சேர்ந்த மோனிஷ் சேரன் மற்றும் சுஷாந்த கோஹோரி ஆகிய இரண்டு புலம் பெயர் தொழிலாளர்கள், நேற்று இரவு கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

    சமீப நாட்களாக, தொடரும் இதுபோன்ற சம்பவங்கள் திமுக-வின் பிரித்தாளும் அரசியலால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளைத் திரும்பத் திரும்ப வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எப்போது வெறுப்புணர்வு இயல்பான ஒன்றாக மாற்றப்படுகிறதோ, அரசியல் லாபத்திற்காக ஒருவரின் அடையாளம் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அப்போது வன்முறை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது."

    தமிழ்நாட்டினால் இந்த ஒழுக்க மற்றும் நிர்வாக வீழ்ச்சியை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர்,
    • திருவாரூர், நாகை, கோவை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

    தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. சூரியன் காலை 7 மணிக்குப் பிறகுதான் தெரிகிறது. இவ்வாறு இருக்கும் நேரத்தில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் மற்றும் சில மாவட்டங்களில் இன்று மழை பெய்வதற்கான அறிகுறியுடன் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கோவையின் காட் (ghat) பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    • திமுகவின் 55 மாத ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை.
    • இளைஞர்களை சீரழித்த வேதனையான சாதனையை திமுக அரசு செய்திருக்கிறது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் வடமாநில இளைஞரை 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே, அதே தொடர்வண்டி நிலையத்தில் ஜமால் என்ற புடவை வணிகர் போதையில் இருந்த 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். ஒரே தொடர்வண்டி நிலையத்தால் அடுத்தடுத்து போதைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதும், அத்தாக்குதல்களைத் தடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.

    தொடர்வண்டி நிலையத்தில் தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று கூறி திமுக அரசு பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. தாக்குதல் எங்கு நடத்தப்பட்டது என்பது இங்கு சிக்கல் அல்ல. தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது தான் இங்கு பிரச்சினையே. சில நாள்களுக்கு முன் கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட வடமாநில இளைஞரும், இப்போது தாக்கப்பட்டுள்ள புடவை வணிகர் ஜமாலும் அப்பாவிகள். அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் எந்தத் தூண்டுதலிலும் ஈடுபடவில்லை. மாறாக கஞ்சா போதையில் இருந்தவர்கள் தான் அவர்களைத் தாக்கியுள்ளனர்.

    திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் நடந்த இரு தாக்குதல்களுக்கும் காரணம் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் கட்டுப்படுத்தப்படாத புழக்கம் தான். அதனால் தான் இத்தகையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அடியோடு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக இமாலயப் பொய் ஒன்றை சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதற்கு அடுத்த நாளே இந்த நிகழ்வு நடந்திருப்பதன் மூலம் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் எங்கும் நிறைந்திருப்பது உறுதியாகியிருக்கிறது.

    திமுகவின் 55 மாத ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை; தரமான கல்வி வழங்கவில்லை; அரசு பள்ளிகளையும், கல்லூரிகளையும் வலுப்படுத்தவில்லை; தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றவில்லை. ஆனால், தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, மது உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களை வெள்ளமாக பாயவிட்டு இளைஞர்களை சீரழித்த வேதனையான சாதனையை மட்டுமே திமுக அரசு செய்திருக்கிறது.

    தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுக அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதிலும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதிலும் படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை. இளைஞர்களை சீரழித்த, தோல்வியடைந்த திமுக தமிழகத்தை தொடர்ந்து ஆளும் தகுதியை இழந்து விட்டது. இதை அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உறுதி செய்வார்கள்.

    • போதையில் யார் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?
    • ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன.

    போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்?

    அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?

    "தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை" என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, இராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான பொம்மை முதல்வருக்கும் தெரியாதா என்ன?

    போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,

    சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால்,

    எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?

    நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தமிழ்நாடு தவித்தது போதும்!!

    2026, விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும் என கூறினார்.

    • மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
    • புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை வரையில் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    2025-ம் ஆண்டு இன்று இரவுடன் விடைபெற்று நள்ளிரவு 12 மணிக்கு 2026-ம் ஆண்டு பிறக்கிறது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று இரவு களைகட்டி காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.

    குறிப்பாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    நட்சத்திர விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டையொட்டி ஆட்டம், பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத் துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று பிற்பகலில் இருந்தே இளைஞர்கள் அதற்கு தயாரானார்கள்.

    மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று இரவு 9 மணியில் இருந்து மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்ததும் மெரினாவில் கூடியிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஹேப்பி நியூ இயர் என உற்சாக குரல் எழுப்பி புத்தாண்டை வரவேற்கிறார்கள்.

    இந்த கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக சென்னை மாநகர் முழுவதும் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    அனைத்து கடற்கரை பகுதிகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்திலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

    நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பை பாஸ் சாலை மற்றும் ஜி.எஸ்.டி. ரோடு ஆகிய பகுதிகளிலும், தாம்பரம் ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பைக்ரேசை கட்டுப் படுத்துவதற்காக 30 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்று இரவு 9 மணிக்கு பிறகு சென்னை மாநகரில் உள்ள 30 மேம்பாலங்கள் முழுமையாக மூடப்படுகிறது.

    சென்னையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டு தலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை வரையில் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தற்காலிக காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    மெரினாவில் மணல் பரப்பில் இறங்குவதற்கு கூட இன்று இரவு போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். இதைத் தாண்டி யாராவது கடற்கரை மணல் பகுதிக்குள் நுழைவதை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கிறது. முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட உள்ளன. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களையும் தயார் நிலையில் பணியமர்த்த உள்ளனர். கடலில் யாரும் மூழ்கிடாமல் உயிரிழப்பை தடுப்பதற்காக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அவசர மருத்துவ உதவிக்காக மெரினாவில் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் சீண்டல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தனியார் இடங்களில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கும் போலீசார் முழுமையாக தடை விதித்து உள்ளார்கள். இது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருப்பவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் போதை பொருட்களை யாராவது பயன் படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த தடையை மீறி யாராவது போதைப் பொருட்களை பயன்படுத்தினால் அதுபற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் புத்தாண்டு கொண்டாட் டத்தின்போது நடைபெறும் மது விருந்துகளை இரவு 1 மணிக்குள் முடித்து விட வேண்டும் என்றும், போதையில் மோட்டார் சைக்கிள்கள், கார்களை பொதுமக்கள் ஓட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி யாராவது போதையில் வாகனங்களை ஓட்டினால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இப்படி சென்னை, கோவை, திருச்சி மதுரை, நெல்லை, கன்னியாகுமரி என அனைத்து முக்கிய மாநகர பகுதிகளிலும் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தமிழகம் முழு வதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    • சிபிஐ(எம்) தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் ,கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும்
    • கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல

    கடந்த சில நாட்களாகவே காங்கிரஸில் உட்கட்சி மோதல் நிலவிவருகிறது. அதில் பெட்ரோல் ஊற்றும்விதமாக அமைந்தது பிரவீன் சக்ரவர்த்தியின் தமிழ்நாடு நிலுவைக்கடன் தொடர்பான கருத்து. இவரின் இந்த கருத்து தொடர்பாக விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன. இதனிடையே பிரவீன் சக்ரவர்த்தி தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக செல்வப்பெருந்தை தெரிவித்திருந்திருந்தார்.

    தொடர்ந்து இன்றும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது. அவர்மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம். இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது என தெரிவித்தார். இந்நிலையில் தங்கள் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிடக்கூடாது என எச்சரிக்கை அளிக்கும் விதமாக மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ராகுல் காந்தியிடம் "நடவடிக்கை எடுக்க" கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி கூறியதை ஒரு செய்தியில் படித்தேன். ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை விசிகவின் ரவிக்குமார், மதிமுகவின் துரைவைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் "உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்" என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா? கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும்.

    ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும். சிபிஐ(எம்) தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    அதேபோல், துரைவைகோ, திருமாவளவனும் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் "லக்ஷ்மண் ரேகை"யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல — ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாமி தரிசனம் செய்தார்.
    • திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,

    திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழ்நாடு அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு ஆர்வம் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    • கடந்த 28-ந்தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்.

    சென்னை:

    தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

    இந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 26-ந்தேதி இடைநிலை ஆசிரியர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். 27-ந்தேதி எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த 28-ந்தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று முன்தினம் சென்னை எழிலகம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் ஆகிய 2 இடங்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். நேற்று எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி னார்கள். அதன்பிறகு பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு கல்லூரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். இருவழி சாலையில் ஒரு பகுதியில் முழுவதும் ஆசிரியர்கள் அமர்ந்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போராட்டம் குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறியதாவது:-

    எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். இதுவரை விடுமுறை நாட்களில் போராடி வந்தோம். இனி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஆனாலும் நாங்கள் வேலை நாட்களில் விடுமுறை எடுத்து போராட்டத்தை தொடருவோம். எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்தால் அமர்ந்து போராடுவோம். எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். புத்தாண்டு, பொங்கல் நாட்களிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆசிரியர்கள் மறியல் போராட்டம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் பதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய ஆசிரியர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    • போலியான வாக்குறுதிகளையும் பசப்பு வார்த்தைகளையும் தமிழக மக்கள் இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை.
    • தமிழ்நாடே தலை குனிகின்ற செயலாக திருத்தணியில் வடமாநில வாலிபர் மதுபோதையில் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவார்கள்.

    போலியான வாக்குறுதிகளையும் பசப்பு வார்த்தைகளையும் தமிழக மக்கள் இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை.

    கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தபோதும் கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதலமைச்சர் இப்போது தேர்தலுக்காக அங்கு சென்று உள்ளார்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகமே போர்க்களமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களின் குரலெல்லாம் தமிழக அரசுக்கு கேட்கவில்லை.

    செவிலியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முதலமைச்சர் கவலைப்படாமலேயே இருந்து வருகிறார். ஆனால் தினந்தோறும் போட்டோ ஷூட் மட்டும் நடத்தி வருகிறார்.

    தமிழ்நாட்டை சீரழிக்கும் ஆட்சி புதிய ஆண்டில் முடிவுக்கு வரும். மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

    தமிழ்நாடே தலை குனிகின்ற செயலாக திருத்தணியில் வடமாநில வாலிபர் மதுபோதையில் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

    வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.

    கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தமிழ் நாட்டில் கஞ்சா இல்லை போதை பொருட்கள் புழக்கம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தேசிய தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
    • கதவை திறந்து வைத்துக்கொண்டு கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என்று எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது. பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தேசிய தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

    தமிழக அரசுக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசும் நிர்வாகிகள் மீது அகில இந்திய தலைமையிடம் புகார் அளித்து உள்ளோம்.

    இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. யாராலும் கூட்டணியை உடைக்க முடியாது. கூட்டணி சமுத்திரம் போன்றது. அதில் சில அலைகள் வரலாம். போகலாம். கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது.

    கதவை திறந்து வைத்துக்கொண்டு கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என்று எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கதவை திறந்து வைத்துக்கொண்டு இருந்தாலும் யாரும் செல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.
    • புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    திருத்தணி ரெயில் நிலையம் அருகே வடமாநில வாலிபரை கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் அரிவளால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை 'ரீல்ஸ்' என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.

    இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என கூறினார்.

    • நான் வசிக்கும் பகுதி, போதைப்பொருளுக்கு அடிமையான குற்றவாளிகளால் மிக அபாயகரமானதாக இருக்கிறது.
    • எனது ஸ்டுடியோ பகுதியில் உள்ள பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர் நண்பர்கள், சமீபத்தில் பல முறை தாக்கப்பட்டனர்.

    திருத்தணி ரெயில் நிலையம் அருகே வடமாநில வாலிபரை கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் அரிவளால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோகாட்சி வைரலாக பரவி வருகிறது.

    இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிக அளவில் இருப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் தான் வசிக்கும் பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளாக மிக அபாயகரமானதாக இருக்கிறது என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. சென்னையில் நான் வசிக்கும் பகுதி, போதைப்பொருளுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மிக அபாயகரமானதாக இருக்கிறது

    எனது ஸ்டுடியோ பகுதியில் உள்ள பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர் நண்பர்கள், சமீபத்தில் பல முறை தாக்கப்பட்டனர்.

    இந்தத் தாக்குதல்காரர்களில் பெரும்பாலானோர் இனவெறியர்களாக இருப்பதற்கு பெருமைப்படுகிறார்கள். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை ஒட்டுமொத்தமாக வெறுத்துத் தாக்குகிறார்கள்.

    அவர்களுக்கு ஆதரவாக பல உள்ளூர் அரசியல் இத்தகையவர்களுக்கு ஆதரவாக பல உள்ளூர் அரசியல்குழுக்களும், சாதி அடிப்படையிலான அமைப்புகளும் ஓடி வருகின்றன.

    இதை ஏற்றுக்கொண்டு உண்மை நிலையை புரிந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியாதா? நான் உட்பட அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது என சந்தோஷ் நாராயணன் கூறினார்.

    ×