என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவு உள்ள உண்மையான தொண்டர்கள் நாங்கள்.
    • நாங்கள் ஆறறிவு கொண்ட மனிதர்கள்

    பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், தவெக நிர்வாகி அருண்ராஜ்க்கும் இடையே நீண்டநாட்களாக ஒரு வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய் திறக்காதது அண்ணாமலை கருத்துக்கூற, அதற்கு அவரை கிண்டலடிக்கும் விதமாக பதில் அளித்தார் அருண்ராஜ். 

    மீண்டும் இதற்கு பதிலளித்த அண்ணாமலை, நான் நடிகருக்கு ஜால்ரா போடுகிறவன் அல்ல, மோடியின் விஷ்வாச நாய் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு மீண்டும் பதிலளித்துள்ள தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் அருண்ராஜ், 

    "எனக்கு அவரைப்பற்றி தெரியாது. ஆனால் நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது. குறிப்பாக குரைக்கும் நாய்கள் கிடையாது. நாங்கள் ஆறறிவு கொண்ட மனிதர்கள்; தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவு உள்ள உண்மையான தொண்டர்கள் நாங்கள். தவெக தலைவர் கூறியவாறு தரம் தாழ்ந்து நாங்கள் பேசமாட்டோம். விஜய் இப்போது நடிகர் கிடையாது; அவர் முன்னாள் நடிகர்.

    நடிப்பை முழுவதுமாக விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்கள் சேவை செய்யவேண்டும் என வந்திருக்கிறார். ஈரோட்டில் வந்தவர்கள் நடிகரை பார்க்க வரவில்லை. தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் சக்தியாக இருக்கக்கூடிய தவெக தலைவரை பார்க்க வந்தனர்" என தெரிவித்துள்ளார். 

    • நாங்கள் அந்த நாயுடன் மிகவும் பாசமாகிவிட்டதால், அதை அதன் பழைய இடத்திற்கே திருப்பி அனுப்ப மனம் வரவில்லை.
    • பீச்சஸ் எங்கள் செல்லப் பிராணியாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது அலுவலகத்தின் முன்பு இருந்த தெருநாயை வளர்ப்பு பிராணியாக பதிவு செய்துள்ளதாக  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    2021-ல் நான் அமைச்சரான சில மாதங்களில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள எனது அலுவலகத்திலிருந்து வெளியேறும்போது உடைந்த காலுடன் ஒரு நாயை கண்டேன் (செயலகத்தில் இருந்த பல நாய்களில் அதுவும் ஒன்று). சமீபத்தில் ஒரு விபத்தில் அதன் கால் உடைந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் (அது தவறான தகவல் என்று பின்னர் தெரியவந்தது), அதன் காலைச் சரிசெய்து, அதை மீண்டும் அதன் இடத்திற்கே கொண்டு சேர்க்க முடிவு செய்தேன்.

    ஆனால் மருத்துவரிடம் சென்றபோது, அது பல மாதங்களுக்கு முன் நடந்த விபத்து என்றும் உடைந்த கால் தவறான முறையில் கூடிவிட்டதும் தெரியவந்தது. பின்னர் அதற்கான சிகிச்சை சில மாதங்கள் நீடித்தது. நாயின் காலில் ஒரு உலோகத் தகடு மற்றும் திருகுகள் பயன்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, அதன் காலை சரிசெய்ய ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஒரு (மனிதர்களுக்கான) எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரின் உதவியும் தேவைப்பட்டது!

    அதற்குள் நாங்கள் அந்த நாயுடன் மிகவும் பாசமாகிவிட்டதால், அதை அதன் பழைய இடத்திற்கே திருப்பி அனுப்ப மனம் வரவில்லை. அதனால் நாங்கள் அதற்கு 'பீச்சஸ்' என்று பெயரிட்டோம், அது எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகிவிட்டது.  சமீபத்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, செயலகத்தில் இருந்த நாய்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன... அவை எங்கு கொண்டு செல்லப்பட்டன என்று தெரியவில்லை.

    மறுபுறம் மறுபுறம், சென்னை மாநகராட்சியின் புதிய விதிகளின் கீழ், இப்போது பீச்சஸ் எங்கள் செல்லப் பிராணியாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • நாட்டிய விழா வரும் ஜனவரி 19-வரை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.
    • தினமும் மாலை-5:30க்கு துவங்கி இரவு-8:30வரை நடைபெறும்.

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா இன்று மாலை 5:30-க்கு சென்னை இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கல இசையுடன் துவங்கியது. தமிழ்நாடு சுற்றுலாதுறை மற்றும் இந்திய சுற்றுலாதுறை இணைந்து நடத்தும் இந்த நாட்டிய விழா வரும் ஜனவரி 19-வரை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.

    இதில் பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகள், கதகளி, ஒடிசி, குச்சிப்புடி, கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டிய நடனங்கள் நடைபெறுகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் மற்றும் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இதனை துவக்கி வைத்தனர்.


    சுற்றுலாத்துறை கூடுதல் தலைமை செயலர் க.மணிவாசன், சுற்றுலாதுறை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ், இணை இயக்குநர் சிவப்பிரியா, மாவட்ட சப்-கலெக்டர், சுற்றுலா அலுவலர் சக்திவேல், நகராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், முன்னாள் தலைவர் விசுவநாதன், கவுன்சிலர் மோகன்குமார் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். இந்த நாட்டிய விழா தினமும் மாலை-5:30க்கு துவங்கி இரவு-8:30வரை நடைபெறும். 

    • 2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான்.

    'சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, இன்று 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவிலியர்களை பணி நிலைப்பு செய்ய என்ன தடை? அதிகாரத் திமிர், ஆணவத்தில் தி.மு.க அரசு ஆட்டம் போடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான செவிலியர்களை தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 4 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிரையும், ஆணவத்தையும் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, செவிலியர்களை மிரட்டி பணியவைக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும். 

    2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8.322 செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும். இதை எதிர்த்து பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.

    கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வரும் அவர்கள் பணி நிலைப்புக் கோரி கடந்த 18-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் திமுக அரசு, அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. மேலும் பேச்சு நடத்த அழைக்கப்பட்ட தங்களிடம், தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா? இது அரசோட கொள்கை முடிவு அவ்வளவுதான்.

    நானே பார்க்குறேன் நிறைய இடங்கள்ல தேவைக்கும் அதிகமா வேலையே செய்யாம ஆட்கள் இருக்காங்க. தேர்தல் நேரத்துல போராட்டம் பண்ணி நெருக்கடி கொடுக்க பார்க்குறீங்களா? என்ன பண்ணுவீங்க? போராடுவிங்க.... போராடிக்கோங்க என்று சுகாதாரத் துறை அமைச்சர் மிரட்டியதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியது. இந்த அணுகுமுறையை ஏற்கவே முடியாது.

    அதுமட்டுமின்றி, ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், காலியிடங்களே இல்லாத நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்யவே முடியாது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த விளக்கம் மிகவும் விநோதமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய செவிலியர் பணியிடங்களை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது ஒருபுறமிருக்க, காலியிடங்களே இல்லை என்பது அப்பட்டமான பொய் தான்.

    நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்படாத அனைத்து பணியிடங்களும் காலியிடங்கள் தான். அந்த வகையில் ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான். அந்த இடங்களில் ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க எந்தத் தடையும் இல்லை, அவ்வாறு செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாதது தான் ஒரே ஒரு தடை ஆகும். 

    நிரந்தர செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்களோ, அதே முறையை பின்பற்றி தான் ஒப்பந்த செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்தில் போட்டித் தேர்வு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. அத்தகைய சூழலில் அவர்கள் அனைவரையும் ஒரே ஓர் அரசாணையின் மூலம் பணி நிலைப்பு செய்ய முடியும். அவ்வாறு செய்தால் அதை உச்ச நீதிமன்றம் கூட கேள்வி கேட்க முடியாது. ஆனால், வாய்கிழிய சமூகநீதி பேசும் திமுக அரசுக்கு அதை செயல்படுத்துவதற்கு மட்டும் மனம் வராது. சமூகநீதி என்றாலே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.

    ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களும் நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியைத் தான் செய்கின்றனர். அதனால், தங்களுக்கும் சம ஊதியம் வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உயர்நீதிமன்றமும் அதை ஏற்று சம ஊதியம் வழங்க ஆணையிட்டது. ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தது.

    செவிலியர்களிடம் அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீர்கள். ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களுக்கு சம ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள். மத்திய அரசு பணம் தரவில்லை என்று கூறாதீர்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் ஏன் ஒரு தனித்திட்டத்தை தொடங்கக்கூடாது? உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு தானே? அதை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது. இலவசங்களை கொடுக்க பணம் இருக்கிறது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்? ஆனால் செவிலியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? என்று கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கண்டனம் தெரிவித்தது. அதற்குப் பிறகாவது செவிலியர்களுக்கு பணி நிலைப்பும், சம ஊதியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 16-ஆம் தேதி வலியுறுத்தினேன். ஆனால். சமூகநீதியில் அக்கறை இல்லாத திமுக அரசு, செவிலியர்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டது.

    இப்போது ஒப்பந்த செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்களோ,  அதேபோல் தான் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 45 ஆயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில் பா.ம.க. ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கலைஞர், 01.06.2006 முதல் அவர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தார். அதேபோல் இப்போது செய்ய எந்தத் தடையும் இல்லை.

    ஆனால். அதிகாரம் தந்த போதை, ஆணவம், அதிகாரத் திமிர் ஆகியவை தலைக்கு ஏறி ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி குறித்து சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆட்சியாளர்களின் தலையில் ஏறிய அனைத்தும் இறங்கும் வகையில் அதிரடியான தீர்ப்பை வரும் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள். அதன்பின் அமையும் ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்னும் பட்டியல்கூட இடவில்லை
    • இளைஞர் பூர்ணசந்திரனின் இறப்பிற்கு காரணம் மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும்தான்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    இதனிடையே மலைக்குச் செல்லும் பாதை இரும்புத் தடுப்புகளால் அடைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்கள் யாரும் மலை மீது செல்ல அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில், மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி சந்தனக்கூடு விழாவை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து முஸ்லீம்கள் மட்டும் எவ்வாறு மலைமீது செல்ல அனுமதிக்கப்படலாம் என அக்கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு அங்குள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்களை சந்திக்க வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 

    "இளைஞர் பூர்ணசந்திரனின் இறப்பிற்கு காரணம் மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும்தான். நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத சட்டவிரோத காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை. தமிழ்நாடு காவல்துறை சட்டவிரோதமானவர்கள் இல்லை என்றால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் தீர்ப்பை செயல்படுத்தி இருக்க வேண்டும். ஏன் செயல்படுத்தவில்லை? தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்னும் பட்டியல்கூட இடவில்லை. நீங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்.

    இந்த மக்களை ஏன் கைதுசெய்ய வேண்டும்? அவர்களுக்கு சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி என்றால், இந்துக்கள் காசி விஸ்வநாதரை சென்று வணங்குவதற்கு ஏன் தடை? இது என்ன ஔரங்கசீப் ஆட்சியா? மு.க. ஸ்டாலின் ஆட்சியா, முகமது ஸ்டாலின் ஆட்சியா? தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? மு.க.ஸ்டாலின், மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் அனைவரும் இந்து விரோதிகள்." என தெரிவித்தார். 

    தொடர்ந்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட, ஹெச். ராஜா மற்றும் பாஜகவை சேர்ந்த மற்ற ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்ட மக்களை காண உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    • பயணிகள் அளித்த வரவேற்பை அடுத்து 8 பெட்டிகள் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது.
    • மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.

    சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவை கடந்த 2023 செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் ரயில் கடக்கிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் அளித்த வரவேற்பை அடுத்து 8 பெட்டிகள் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது.

    ஆனால் இந்த ரயில் பல்வேறு பயணிகள் இறங்கி இடம்மாறும் நிறுத்தமான விருத்தாசலத்தில் நிற்காமல் சென்றுவந்தது. இதனிடையே பயணிகள் பலரும் இந்த ரயில் விருத்தாசலத்தில் நின்றுசெல்லவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து வந்தே பாரத் ரயில், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் தேதி குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    ராமேசுவரம்:

    வடமாநிலங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு வரும் ரெயில்களில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் திருச்சி ரெயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை புவனேஸ்வரிலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த புவனேஸ்வர் விரைவு ரெயிலில் போலீசார் சோதனை செய்தபோது ரெயிலின் பின்புறம் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றை எடுத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 5 பொட்டலங்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்ததையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார் ராமேசுவரம் ரெயில்வே காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்தது யார் என்பது குறித்து ரெயில்வே நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    25-ந்தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    26 மற்றும் 27ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 25-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    உறைபனி எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    21-12-2025 மற்றும் 22-12-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, மத்தியமேற்கு- தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்துவிட்டு இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது.
    • அவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு கடந்த 16-ந்தேதி தமிழகத்தில்; இலவச மின்சாரம் வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விவசாயிகள் தட்கல் திட்டத்தில் இணைப்பு வேண்டுமானால் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும் என்று காலக்கெடு எதுவும் குறிப்பிடாமல் அறிவித்து இருந்தது. ஆனால் அறிவிப்பு வெளியான 2 தினங்களில் அதாவது கடந்த 18-ந்தேதி மதியம் 2 மணியுடன் இத்திட்டம் நிறைவுப் பெற்றுவிட்டதாக விண்ணப்பம் பெறுவதை நிறுத்திவிட்டார்கள்.

    பல லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் போது 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்துவிட்டு இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது.

    எனவே, அவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும். அதோடு குறைந்த பட்சம் 50 ஆயிரம் விவசாயிகளுக்காவது இத்திட்டத்தின் மூலம் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    • நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த 2011ம் ஆண்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆர்.ஓ.வி. நீர்மூழ்கி கலத்தை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பாசனத்திற்கு போக வைகை அணைக்கு செல்லும் நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.

    999 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணையின் மேலாண்மை, நீர் பயன்படுத்தும் உரிமை, நீர்திறப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை தமிழக பொதுப்பணித்துறை செய்து வருகிறது.

    இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என கேரள அரசு மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் வதந்தியை கிளப்பி வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பேபி அணையை பலப்படுத்திவிட்டு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு தமிழக அதிகாரிகள் பராமரிப்பு பணி மேற்கொள்ள தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மேலும் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    கடந்த 2011ம் ஆண்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆர்.ஓ.வி. நீர்மூழ்கி கலத்தை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அணை பலமாக உள்ளது. அச்சப்பட தேவையில்லை என உத்தரவிட்டு பல்வேறு வழிகளை வழங்கி வருகின்றனர். கடந்த நவம்பர் 10ம் தேதி அணையை மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது. பின்னர் மதுரையில் நடத்திய ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் நவீன ஆர்.ஓ.வி. மூலம் ஆய்வு நடத்த இரு மாநில அதிகாரிகள் ஒப்புதலோடு முடிவு எடுக்கப்பட்டது.

    தரைக்கு மேல் இருந்து இயக்கப்படும் இந்த கருவி மூலம் அணைக்கு அடியில் நீரில் மூழ்கியுள்ள சுவர்கள், தடுப்புகள், கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றை ஆராயலாம். மேலும் ஆழமான அபாயகரமான பகுதிகளில் கருவிகள் பொருத்தப்பட்ட காமிராக்கள் மூலம் முப்பரிமாண வீடியோ மற்றும் படங்களை பதிவு செய்து கொள்ளலாம. 14 ஆண்டுகளுக்கு பின்னர் 2வது முறையாக ஆய்வு நடத்துவதற்காக ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லியில் உள்ள மத்திய மண் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆர்.ஓ.வி. நீர் மூழ்கி கலம் வரவழைக்கப்பட்டு தமிழக பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் ஆய்வுக்காக சுமார் 7 பேர் கொண்ட வல்லுனர் குழுவுடன் துறை அதிகாரிகள், இரு மாநில அதிகாரிகள் முன்னிலையில் நாளை முதல் அணையின் 250 மீட்டர் நீருக்கு அடியில் அணையின் உட்புறம், முன்புறப்பகுதிகளில் ஆய்வு நடைபெற உள்ளது. தினசரி 20 மீட்டர் மட்டுமே ஆய்வு செய்ய முடியும் என்பதால் 12 நாட்கள் வரை ஆய்வு நடபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.

    போக்குவரத்து சேவையில் புறநகர் மின்சார ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புறநகர் மின்சார ரெயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்பதாலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக பயணம் செய்யலாம் என்பதாலும் அதில் பயணிப்பதை பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

    சென்னையில் கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.

    தற்போது ரெயில் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. வழக்கமாக உள்ள அதே கட்டணமே நீடிக்கிறது. இதேபோல் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்று ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.

    • அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
    • என்னிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் தற்போது அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார்.

    சென்னை:

    சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசியோதெரபி படித்து வருகிறார். 4-ம் ஆண்டு மாணவியான இவர் பெரம்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார்.

    அந்த ஆஸ்பத்திரியில் ரூ.4 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சி பெற்ற மாணவி அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரான டாக்டர் ஒருவர் மீதுதான் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.

    இது தொடர்பாக மாணவி அளித்துள்ள புகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரி உரிமையாளரான டாக்டர் எனக்கு காலை 6.30 மணிக்கு போன் செய்து நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. நேரில் வா என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து பகல் 1 மணி அளவில் நான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். இதன் பிறகு டாக்டர் தனது காரில் பெண் ஒருவருக்கு மசாஜ் செய்ய வேண்டி உள்ளது என என்னிடம் தெரிவித்தார். இதை நம்பி நான் அவருடன் கொளத்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு காரில் சென்றேன்.

    அப்போது டாக்டர் என்னிடம் நீ, காபி, டீ எதுவும் சாப்பிடுகிறாயா? என்று கேட்டார். நான் அந்த பழக்கம் இல்லை என்று கூறினேன். இதையடுத்து காரில் இருந்த குளிர்பானத்தை எனக்கு கொடுத்தார். அதனை குடித்ததும் நான் மயக்கம் ஆகிவிட்டேன்.

    அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நீண்ட நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது எனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லை.

    என்னை காரில் அழைத்து சென்ற டாக்டரும் ஆடை எதுவும் இன்றி படுக்கையில் எனது அருகில் படுத்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை தள்ளி விட்டு விட்டு உடைகளை அணிந்துக் கொண்டு அங்கிருந்து அச்சத்துடன் வீட்டுக்கு வந்து விட்டேன். பயந்து போய் யாரிடமும் சொல்லாமல் இருந்தேன்.

    பின்னர் இதுபற்றி எனது அக்காவிடம் கூறினேன். இதற்கு பிறகு அவரும், எனது உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடமும், அவரது மனைவியிடமும் இதுபற்றி கேட்டு சண்டை போட்டனர்.

    என்னிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் தற்போது அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார். எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னுடன் தகாத உறவில் ஈடுபட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மருத்துவ மாணவி முதலில் இந்த புகார் மனுவை செம்பியம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கொளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் மாணவி அளித்த புகார் மீது தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    மாணவி புகாரில் கூறி இருப்பது பற்றிய தகவல்கள் தொடர்பாக கூடுதல் விவரங்களையும் சேகரித்தனர். இதில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து டாக்டர் கார்த்திகேயனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பிசியோதெரபிஸ்ட் டாக்டரான இவர் சொந்தமாக ஆஸ்பத்திரியை நடத்தி வரும் நிலையில்தான் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

    பிசியோதெரபிஸ்ட் படித்து வந்த கொடுங்கையூர் மாணவியை அடைவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக நோயாளி ஒருவருக்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என்று ஏமாற்றி மாணவியை தனது காரில் அழைத்துச் சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

    இதையடுத்து கொளத்தூர் ஜெயந்தி நகர் 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாணவியை அழைத்துச் சென்ற போதுதான் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இதற்காக கோககோலா குளிர்பானத்தை வாங்கி அதில் மயக்க மருந்தை கலந்து தயாராக வைத்திருந்து உள்ளார்.

    இதைதான் மாணவிக்கு கொடுத்து மயக்கம் அடைய செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கற்பழித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பிசியோதெரபிஸ்ட் டாக்டரான கார்த்திகேயன் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டு உள்ளது. பி.என்.எஸ். 123-குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருளை சாப்பிட கொடுத்தல், பி.என்.எஸ். 63-கற்பழிப்பு, பி.என்.எஸ். 64-கற்பழிப்புக்கான தண்டனையை உறுதி செய்யும் பிரிவு ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் டாக்டர் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த பாலியல் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×