search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வறட்சி மாவட்டம்"

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
    • அதிகாரியுடன் குமரி விவசாயிகள் கடும் வாக்குவாதம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் வாணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜோதிபாசு உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

    பட்டணம் கால்வாய் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையும் அந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உப்பாக மாறக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    எனவே பட்டணங்கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்திற்கு தண்ணீர் வழங்கிவிட்டு குமரி மாவட்டத்தை புறக்கணிப்பது நியாயமானது கிடையாது. விவசாயிகள் வீதியில் வந்து போராடவும் தயங்க மாட்டார்கள். அந்த அளவிற்கு விவசாயிகள் கொதித்து போய் உள்ளார்கள். பேச்சிப்பாறை அணையில் 7 அடி தண்ணீர் இருக்கும்போதே தண்ணீர் வழங்கப்பட்டது. சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் தற்பொழுது அணையில் 40 அடி தண்ணீர் உள்ள போதும் கூட பட்டணம் கால்வாய்க்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணமாகும். தோவாளை கால்வாயில், அதிகாரிகள் அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதால் தான் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. மோட்டார்கள் மூலம் தண்ணீரை பாய்த்து நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளது. எனவே நெற் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும்.

    போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கடுமையான நஷ்டம் அடைந்துள்ளனர். விவசாயிகள் பாதிப்பை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று குமரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று தருவதற்கு கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேச்சிப்பாறை அணையை தூர்வார வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஜோதிபாசு கூறுகையில், பட்டணம் கால்வாயில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. பணிகள் தற்பொழுது 70 சதவீதம் முடிவு அடைந்துள்ளது. இன்னும் 20 நாட்களுக்குள் பணிகள் முடிவடைந்து செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஏற்கனவே பட்டணங் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்கு சிற்றாறு அணைகளில் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து விட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்பொழுது உள்ள தண்ணீரை வைத்து 20 நாட்களுக்கு விநியோகம் செய்ய முடியும்.

    விவசாயிகள் ஏற்கனவே செய்த பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    சில இடங்களில் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதிக்கு பிறகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மட்டுமே தற்பொழுது பயிர்கள் கருகும் சூழலில் உள்ளது. இரணியல் ெரயில்வே பாலத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விட்டனர். அந்த பகுதியில் தண்ணீரை அடைத்துவிட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று மாலை அல்லது நாளைக்குள் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுப்பணித்துறை அதிகாரியுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.
    • விவசாயிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்.

    நெல்லை:

    நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகம் இருக்கும் வரையில் தமிழக மக்களுக்காக கருணாநிதி செய்த பணிகள் பேசப்படும்.

    நெல்லை மத்திய மாவட்ட அலுவலகத்தில் சென்னை கடற்கரையில் அண்ணாவின் அருகில் கலைஞர் துயில் கொள்ளும் நினைவகம் போன்று மாதிரி நினைவகம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது. நெல்லை மாவட்டத்தை, வறட்சி மாவட்டமாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கலெக்டர் மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தர்மர் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
    • இதுநாள் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.தி.மு.க. எம்.பி. தர்மர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சியான மாவட்டம் என்றுதான் அழைப்பார்கள். அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றால் இந்த மாவட்டத்திற்கு தான் பணி மாறுதல் செய்வார்கள். ஆனால் அந்த நிலையை மாற்றி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இந்த மாவட்டத்தையும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் வளர்ச்சி அடைய செய்தது அ.தி.மு.க. ஆட்சி தான்.

    வறண்ட மாவட்டம் என்ற நிலை மாறி, வளர்ச்சி அடைந்த மாவட்டம் என்ற நிலையை உருவாக்கியது அ.தி.மு.க. அரசுதான். ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் இல்லாததாலும் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் நஷ்டத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகி விட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுநாள் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை.

    தற்போது தமிழக அரசு மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்பட டெல்டா மாவட்டங்களை மட்டும் வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்தையும், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலாகும். இது கண்டனத்திற்குரியது.

    ஏற்கனவே பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வங்கிகளிலும், வெளியில் வட்டிக்கும் பணம் வாங்கி அந்த கடன்களை எப்படி அடைப்பது? என்று விவசாயிகள் விழி பிதுங்கி இருக்கும் இந்த வேளையில் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்காதது மாவட்ட மக்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக ஏன் அறிவிக்கவில்லை? என்ன காரணம்? என்பதை அரசு விளக்க வேண்டும்.

    இந்த மாவட்டத்தில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஏன் வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை? ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசுக்கும், விவசாய துறை செயலாளருக்கும், இ-மெயில் மூலம் அறிக்கை அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×