search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
    X

    ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

    • ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தர்மர் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
    • இதுநாள் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.தி.மு.க. எம்.பி. தர்மர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சியான மாவட்டம் என்றுதான் அழைப்பார்கள். அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றால் இந்த மாவட்டத்திற்கு தான் பணி மாறுதல் செய்வார்கள். ஆனால் அந்த நிலையை மாற்றி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இந்த மாவட்டத்தையும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் வளர்ச்சி அடைய செய்தது அ.தி.மு.க. ஆட்சி தான்.

    வறண்ட மாவட்டம் என்ற நிலை மாறி, வளர்ச்சி அடைந்த மாவட்டம் என்ற நிலையை உருவாக்கியது அ.தி.மு.க. அரசுதான். ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் இல்லாததாலும் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் நஷ்டத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகி விட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுநாள் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை.

    தற்போது தமிழக அரசு மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்பட டெல்டா மாவட்டங்களை மட்டும் வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்தையும், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலாகும். இது கண்டனத்திற்குரியது.

    ஏற்கனவே பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வங்கிகளிலும், வெளியில் வட்டிக்கும் பணம் வாங்கி அந்த கடன்களை எப்படி அடைப்பது? என்று விவசாயிகள் விழி பிதுங்கி இருக்கும் இந்த வேளையில் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்காதது மாவட்ட மக்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக ஏன் அறிவிக்கவில்லை? என்ன காரணம்? என்பதை அரசு விளக்க வேண்டும்.

    இந்த மாவட்டத்தில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஏன் வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை? ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசுக்கும், விவசாய துறை செயலாளருக்கும், இ-மெயில் மூலம் அறிக்கை அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×