search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூலப்பொருட்கள்"

    • வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை சுத்தம் செய்ய வேண்டும்.
    • தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

    நம்முடைய வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது நமக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். சிறு குழந்தைகள் அதிகமாக வீட்டின் தரையில் உட்கார்ந்தும், படுத்தும், உருண்டும் விளையாடுவார்கள். எனவே தரையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது.

    ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு உபயோகப்படுத்தும் திரவத்தை இல்லத்தரசிகள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். ஆர்வம் இருப்பவர்கள் இதை சுயதொழிலாகவும் செய்யலாம். தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிப்பதற்கு பெரிய அளவு முதலீடோ, அதிக பணியாளர்களோ தேவை இல்லை. இதற்கான மூலப்பொருட்கள் ரசாயனங்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மினரல் வாட்டர்- 4 லிட்டர்

    பேக்கிங் சோடா - 100 கிராம்

    சிட்ரிக் அமிலம் - 50 கிராம்

    வினிகர் - 250 மி.லி.

    சோடியம் ஹைப்போ குளோரைடு - 500 மிலி,

    சோடியம் லாரில் ஈதர் சல்பேட்- 100 .46.

    லெமன் கிராஸ் அரோமா எண்ணெய்- 25 மிலி

    செய்முறை

    பிளாஸ்டிக் வாளியில் மினரல் வாட்டரை ஊற்றவும். பேக்கிங் சோடாவை சிறிது சிறிதாக அதில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதில் சோடியம் லாரில் ஈதர் சல்பேட் திரவத்தை ஊற்றி கலக்க வேண்டும். இது தண்ணீர் நுரைப்பதற்கும், தரையில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கும் உதவும். அடுத்ததாக, சிட்ரிக் அமிலத்தை சிறிது சிறிதாக இந்த கரைசலில் ஊற்றி கலக்க வேண்டும். இப்போது கரைசல் நுரைத்து பொங்கத் தொடங்கும். எனவே நிதானமாகவும், கவனமாகவும் கலக்க வேண்டும்.

    நுரை அடங்கியவுடன் வினிகர், சோடியம் ஹைப்போ குளோரைடு, லெமன் கிராஸ் அரோமா எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக கரைசலில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை நன்றாக முடி 24 மணி நேரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். பின்னர் மூடியைத் திறந்து திரவத்தை வடிகட்டி சுத்தமான, ஈரமில்லாத பாட்டில்களில் ஊற்றி வைக்கலாம்.

    தரை துடைக்கும்போது ஒரு வாளி நீருக்கு சில சொட்டுகள் வீதம் இந்த திரவத்தை ஊற்றி கலக்கினால் போதுமானது. தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் வரை செலவாகும். இது குறைந்த செலவில் தரமாக இருப்பதோடு, சுயதொழிலாக மேற்கொண்டால் லாபம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். உங்கள் விருப்பத்திற்கேற்ப வாசனை மற்றும் நிறத்துக்கு பல்வேறு பொருட்களை கலந்து கொள்ளலாம்.

    • பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • தமிழக அரசு விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் விவசாய தொழிலான கோழிப்பண்ணைகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க முன் வர வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் விவசாயத்திற்கு மாற்றுத்தொழிலாக வந்த கோழிப்பண்ணைத்தொழில் தற்போது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கோழிப்பண்ணைத்தொழில் 2 வகையானது .முட்டைக்காக வளர்க்கப்படும் முட்டைக்கோழி ஒரு வகை, மற்றொன்று கறிக்கோழிவகை. பல்லடம் பகுதியில் பண்ணையாளர்கள் அதிக அளவில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

    இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா,கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    இந்தநிலையில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்த்து வருகின்றனர். இதனால் கறிக்கோழி நுகர்வு குறைந்து தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதத்தில் கறிக்கோழி 1கிலோ கொள்முதல் விலை125 ரூபாயாக இருந்த நிலையில் சிலநாட்களுக்கு முன் 96 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

    கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.90 முதல், ரூ. 100 வரை செலவாகும் நிலையில் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    இதையடுத்து கறிக்கோழி பண்ணையாளர்கள் சுமார் 25 சதவீதம் வரை உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:-

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது மழை குறைவு, ஆட்கள் பற்றாக்குறை போன்றவற்றால் விவசாயம் செய்யமுடியாத நிலையில் மாற்றுத்தொழிலாக கறிக்கோழி வளர்ப்பு தொழில் செய்துவருகிறோம் . இதில் நாங்கள் மட்டும் பயன்பெறவில்லை.nபண்ணை தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், சோளம், ராகி பயிரிடும் விவசாயிகள், கறிக்கோழி பண்ணை அமைக்கும் தொழிலா ளர்கள் என நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் இந்தத்தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். கடந்த சில வாரங்களாக மூலப்பொருட்களின் விலை உயர்வு, மற்றும் தீவன தட்டுப்பாடு, நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கறிக்கோழி தொழில் நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.90 முதல் ரூ.100 வரை செலவாகும் நிலையில் புரட்டாசி மாத நுகர்வு குறைவு, விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் கறிக்கோழி உற்பத்தியை சுமார் 25 சதவீதம் வரை குறைத்துள்ளோம். நுகர்வு அதிகரிக்கும்போது வழக்கமான அளவிற்கு கறிக்கோழி உற்பத்தி செய்யப்படும்.

    கோழித் தீவனத்திற்கு மூல பொருளான மக்காச்சோளம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் கிலோ ரூ.17க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.24க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் மக்காச்சோள விளைச்சல் குறைவானதால், வெளிமாநிலங்களில் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்கிறோம். இதனால் விலையும் அதிகம்,போக்குவரத்து செலவும் கூடுதலாகிறது. உதாரணமாக பீகாரில் இருந்து மக்காச்சோளம் கொண்டுவர ஒரு கிலோவிற்கு ரூ. 4 செலவாகிறது. பல்லடத்தில் ரெயில் நிலையம் இல்லாததால், திருப்பூர் ரெயில் நிலையத்திலிருந்து மக்காச்சோள மூட்டைகளை பல்லடம் கொண்டு வர டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவாகிறது. இதனைத் தவிர்க்க மத்திய அரசு பல்லடம் வழியாக ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏனென்றால் பல்லடத்திலிருந்து கறிக்கோழி, கறிக்கோழி தீவனங்கள், காடா ஜவுளிகள், பனியன்கள், விவசாய பொருட்கள் என ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலும் சாலை வழி போக்குவரத்தை நம்பியே உள்ளதால், கால நேரமும், போக்குவரத்து செலவும் அதிகமாகிறது. எனவே பல்லடத்தில் ரெயில் நிலையம் அமையுமானால், இன்னும் ஏற்றுமதியில் சாதிக்கலாம். இதற்கிடையே கடந்த மாதத்தில் ஒரு கிலோ ரூ.35 ஆக இருந்த சோயா புண்ணாக்கு விலை தற்போது ரூ.50 ஆக விலை உயர்ந்துள்ளது. வேன்,லாரி வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்டவையும் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கோழி மருந்துகள் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மின்கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தமிழக அரசு விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் விவசாய தொழிலான கோழிப்பண்ணைகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க முன் வர வேண்டும்.

    மேலும் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் பெரும்பாலும் தென்னை, மற்றும் வெங்காயம்,தக்காளி போன்ற காய்கறிகள் ஆகியவற்றையே உற்பத்தி செய்கிறார்கள். இதனால் ஒரு சில நேரங்களில் லாபம் கிடைத்தாலும் பெரும்பாலும் விவசாயிகள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். இவர்கள் மக்காச்சோள விவசாயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஏனென்றால் மாதம் தோறும் கறிக்கோழி தொழிலுக்கு சுமார் 2 லட்சம் டன் மக்காச்சோளம் தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் டன் மட்டுமே மக்காச்சோளம் கிடைக்கிறது. இதனால் கர்நாடகா, ஆந்திரா பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்கின்றோம். இதனால் எங்களுக்கு போக்குவரத்து செலவு மற்றும் விலை அதிகரிக்கிறது. 1 ஏக்கர் நெல் பயிரிடும் தண்ணீரில் 10 ஏக்கர் மக்காச்சோளம் பயிரிடலாம். எனவே தமிழ்நாட்டில் மக்காச்சோள விவசாயத்தை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகளிடமிருந்து அவற்றை நேரடியாக பெற்று கொள்ள கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அனைத்து வகையான, உற்பத்தி பிரிவுக்கும் பாதுகாப்பாக பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அவசியமாகிறது.
    • கிராப்ட் காகிதம் முன்னறிவிப்பு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ஜவுளித்தொழில் வளர்ச்சியில் ஜவுளி உற்பத்தி மட்டுமல்ல, அதனை சார்ந்த பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. அதன்படி, அட்டை பெட்டி தயாரிப்பும் முக்கிய தொழிலாக இருக்கிறது. ஜவுளி மட்டுமல்ல அனைத்து வகையான, உற்பத்தி பிரிவுக்கும் பாதுகாப்பாக பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அவசியமாகிறது. குறிப்பாக பனியன் ஆடைகள், பின்னலாடைகள் பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.கோவை மண்டல அளவில் 400க்கும் அதிகமான அட்டை பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    முக்கிய மூலப்பொருளாக காகித ஆலைகளிடம் இருந்து கிராப்ட் காகிதம் கொள்முதல் செய்யப்படுகிறது. காகிதத்தை பக்குவப்படுத்தி, அட்டையாக மாற்றுவதற்கு, ஹீட்டர் பயன்படுத்தப்படுகிறது. மூலப்பொருளுக்கு அடுத்தபடியாக எந்திரங்களுக்கான மின்கட்டண செலவும் மிகவும் அதிகமாகியுள்ளது. தற்போதைய மின் கட்டண உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு யூனிட் மின்சார கட்டணம் 7.20 ரூபாயாக இருந்தது தற்போது 11 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், தொழிலாளர் ஊதியம், போக்குவரத்து என பல்வேறு செலவுகள் உயர்ந்து உற்பத்தி செலவு கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்துள்ளது.

    ஏற்கனவே ஆர்டர் இல்லாத நிலையில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் நஷ்டத்தை சமாளிக்க வேண்டிய அட்டைப்பெட்டி விலையை உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    இது குறித்து தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்க துணை தலைவர்கள் தண்டபாணி, சிவக்குமார் ஆகியோர் கூறுகையில், கிராப்ட் காகிதம் முன்னறிவிப்பு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டன் ஒன்றுக்கு 2,000 ரூபாய் உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்து ள்ளோம்.

    கடும் நஷ்டம் ஏற்படும் என்பதால் அட்டைப்பெட்டி விலையை 15 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

    • அதிகபட்சமாக 100 அடி வரை ஒரே கல்லில் சிற்பம் செதுக்க முடியும் என்கின்றனா் இங்கு பணியாற்றும் சிற்பக்கலைஞா்கள்.
    • கற்களை இடைத்தரகா்கள் செயற்கை மணலுக்காகவும், ஜல்லிக்காகவும் வாங்கி பயன்படுத்துவதாலும் விலை அதிகரித்துள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மகாபலிபுரம், காஞ்சிபுரம், சேலம், திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டி, அவிநாசி, நாமக்கல், பழனி, ஓசூா், திருவண்ணாமலை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2,500க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டி, அவிநாசியில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்புவரை 126 கலைக்கூடங்கள் செயல்பட்டு வந்தன. இந்த கலைக்கூடங்களில் 1,800க்கும் மேற்பட்ட சிற்பிகள் பணியாற்றி வந்தனா். இந்த கூடங்களில் இருந்து முருகன், விநாயகா், அம்மன் உள்ளிட்ட சுவாமி சிலைகள் மட்டுமின்றி பெரிய உணவகங்களில் அழகுக்காக வைக்கப்படும் ஆண், பெண் சிலைகள், வீட்டு உபயோகத்துக்காக அம்மிக்கல், குளவிக்கல், ஆட்டாங்கல் போன்றவையும் செதுக்கப்படுகின்றன.

    தமிழகத்தின் பிற மாவட்டங்களில் செதுக்கப்படும் சிலைகளை காட்டிலும் திருமுருகன்பூண்டி, அவிநாசி பகுதிகளில் செதுக்கப்படும் சுவாமி சிலைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உள்ளது. இங்குள்ள கலைக்கூடங்களில் குறைந்தபட்சம் அரை அடியில் இருந்து அதிகபட்சமாக 100 அடி வரை ஒரே கல்லில் சிற்பம் செதுக்க முடியும் என்கின்றனா் இங்கு பணியாற்றும் சிற்பக்கலைஞா்கள்.

    மூலப்பொருட்களின் விலை 60 சதவீதம் உயா்வு:

    திருமுருகன்பூண்டி, அவிநாசி பகுதிகளில் கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு பிரச்சினைகளால் 30க்கும் மேற்பட்ட கலைக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு மிகவும் முக்கியமான காரணம் மூலப்பொருட்கள் விலை உயா்வாகும். இந்த கலைக்கூடங்களுக்கு முன்பு வரையில் ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள குவாரிகளில் இருந்து கருங்கற்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி 30க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    போக்குவரத்து செலவும் அதிகரிப்பு :

    நாமக்கல் மாவட்டம் கொண்டம்பட்டி, காஞ்சிபுரம், நெல்லை மாவட்டத்தில் மயிலாடி ஆகிய இடங்களில் இருந்து மட்டுமே சிலை வடிப்பதற்காக கற்கள் கொண்டுவரப்படுகின்றன. சிலை வடிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக விலையும் சுமாா் 60 சதவீதம் உயா்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக போக்குவரத்துச் செலவும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இது குறித்து திருமுருகன்பூண்டி சிற்பக் கலைஞா்கள் சங்க (அவிநாசி) தலைவா் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: - கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த தொழில் சற்று சரிவை சந்தித்து வந்தது. இத்தகைய சூழ்நிலையில் கல்குவாரிகள் மூடப்பட்டு வருவதால் மூலப்பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கற்களை அதிக விலை கொடுத்து வாங்கிவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு கன அடி கல்லை ரூ.300க்கு வாங்கினால்கூட பணிக்கூடத்துக்கு எடுத்துவருவதற்கு ரூ.600 வரையில் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்தக் கற்களை இடைத்தரகா்கள் செயற்கை மணலுக்காகவும், ஜல்லிக்காகவும் வாங்கி பயன்படுத்துவதாலும் விலை அதிகரித்துள்ளது.

    வெளிநாட்டு ஆா்டா்களும் இல்லை:

    கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்னா் சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுவாமி சிலைகளுக்கு ஆா்டா்கள் வருவது வழக்கம். ஆனால் கொரோனா நோய் தொற்றுக்கு பின்னா் கடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவில் வெளிநாட்டு ஆா்டா்களும் வருவதில்லை. அதே வேளையில் சிற்பிகளுக்கான கூலியும் தற்போது உயா்ந்துள்ளது.

    நன்றாக சிலை செதுக்க தெரிந்த 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள சிற்பிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,500 வரையும், 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள சிற்பிகளுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரையிலும், உதவியாளா்களுக்கு ரூ.1,100ம் கூலியாக வழங்க வேண்டியுள்ளது. இந்த தொழிலுக்கு கண்பாா்வையும், உடல் உழைப்பும் அதிகமாக தேவைப்படுவதால் இளைஞா்கள் இந்த தொழிலில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனா். இதனால் தற்போது சிற்பிகளுக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. சிற்பிகளின் வாரிசுகள்கூட தற்போது பின்னலாடை உள்ளிட்ட வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

    மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்:

    இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு மின்கட்டணத்தை கடுமையாக உயா்த்தியுள்ளது. சிற்பக்கலைக்கூடங்களுக்கான மின் கட்டணம் 30 முதல் 40 சதவீதம் உயா்ந்துள்ளதால் இந்த தொழிலை நடத்துவது மிகவும் சவாலான விஷயமாகவே உள்ளது. ஆகவே உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெறுவதுடன், சிற்பக் கலைஞா்களுக்கு மருத்துவக் காப்பீடு, மாதாந்திர ஊக்கத்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.

    • குளங்களிலும், பட்டா நிலங்களிலும் செங்கலுக்கு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
    • அமைச்சர் துரைமுருகனிடம், சுரேஷ்ராஜன் வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செய லாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் நேற்று சென்னையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான மூலப் பொரு ட்களான பாறைப்பொடி, ஜல்லி, ஹாலோ பிளாக்கல் மற்றும் செங்கல் ஆகியவை கிடைக்காத காரணத்தால் நெல்லை மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்து கட்டிட வேலை செய்து வந்தனர்.

    தற்போது அங்கு கல்குவாரிகள் நிறுத்தப்பட்ட காரணத்தால் குமரி மாவட்டத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காத நிலையில் கட்டிட தொழில்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் வேதனையடைகிறார்கள்.

    மேலும் குளங்களிலும், பட்டா நிலங்களிலும் செங்கலுக்கு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்காமல் இருப்பதால், செங்கல் தொழில் செய்கிறவர்கள்மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே குமரி மாவட்டத்தில் கட்டிட தொழி லுக்கு தேவையான மூலப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும், குளங்கள் மற்றும் பட்டா நிலங்களில் மண் எடுப்பதற்கும் உரிய வழிகளை செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பருத்தி நூல் விலை உயர்வால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைந்துள்ளது.
    • தற்போதைய தொழில் சூழலில் எலாஸ்டிக் விலையை உயர்த்த முடியாத நிலை உள்ளது.

    திருப்பூர் :

    பின்னலாடை உற்பத்தி துறை சார்ந்து திருப்பூர் பகுதியில் 200 எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன.உள்ளாடை ரகங்களில் இணைப்பதற்கான அனைத்துவகை எலாஸ்டிக் ரகங்களையும் இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.கேரளாவில் இருந்து ரப்பர், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பாலியஸ்டர் உள்ளிட்ட பிரதான மூலப்பொருட்களை எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் பெறுகின்றன.வழக்கமாக ரப்பர் விலை திடீரென உயர்ந்து எலாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும். தற்போதுரப்பர் விலை சீராக உள்ளது.

    அதேநேரம் பாலியஸ்டர் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரையிலான இரு மாதங்களில் கிலோவுக்கு 20 ரூபாய் பாலியஸ்டர் நூல் விலை உயர்ந்தது. தற்போது மீண்டும் கடந்த ஒரு மாதத்தில் கிலோவுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது:-

    பருத்தி நூல் விலை உயர்வால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைந்துள்ளது.இதன் எதிரொலியாக 40 சதவீத அளவிலேயே எலாஸ்டிக் உற்பத்தி நடைபெற்றுவருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் விலை உயர்வால், பாலியஸ்டர் நூல் விலை சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தற்போது ஒரே மாதத்தில் 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஆர்டர் வழங்கினாலும் போதுமான அளவு பாலியஸ்டர் நூல் கிடைப்பதில்லை.அதனால் எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதித்துள்ளன. மூலப்பொருள் கொள்முதலுக்கான நிதி தேவை அதிகரித்துள்ளது.எலாஸ்டிக் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது.

    தற்போதைய தொழில் சூழலில் எலாஸ்டிக் விலையை உயர்த்த முடியாத நிலை உள்ளது.பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களோ, எலாஸ்டிக்கிற்கான தொகையை வழங்க 90 நாட்களுக்கு மேல் இழுத்தடிக்கின்றன. இது, நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்கிறது. முன் பணம் செலுத்தினால் மட்டுமே பாலியஸ்டர் நூல் கிடைக்கிறது.நிலுவை தொகை வசூலாவதில் உள்ள சிக்கல்களால் போதிய அளவு நூல் வாங்க முடிவதில்லை. நெருக்கடியான இந்த சூழலில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் 60 நாட்களுக்குள் தொகை வழங்கினாலே போதும். எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களின் நிதி நெருக்கடி பிரச்சினைகள் ஓரளவு தீரும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×