search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீவன தட்டுப்பாடு-மூலப்பொருட்கள் விலை உயர்வால் நெருக்கடியை சந்திக்கும் பல்லடம் கறிக்கோழி உற்பத்தி தொழில்
    X

    தீவன தட்டுப்பாடு-மூலப்பொருட்கள் விலை உயர்வால் நெருக்கடியை சந்திக்கும் பல்லடம் கறிக்கோழி உற்பத்தி தொழில்

    • பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • தமிழக அரசு விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் விவசாய தொழிலான கோழிப்பண்ணைகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க முன் வர வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் விவசாயத்திற்கு மாற்றுத்தொழிலாக வந்த கோழிப்பண்ணைத்தொழில் தற்போது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கோழிப்பண்ணைத்தொழில் 2 வகையானது .முட்டைக்காக வளர்க்கப்படும் முட்டைக்கோழி ஒரு வகை, மற்றொன்று கறிக்கோழிவகை. பல்லடம் பகுதியில் பண்ணையாளர்கள் அதிக அளவில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

    இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா,கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    இந்தநிலையில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்த்து வருகின்றனர். இதனால் கறிக்கோழி நுகர்வு குறைந்து தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதத்தில் கறிக்கோழி 1கிலோ கொள்முதல் விலை125 ரூபாயாக இருந்த நிலையில் சிலநாட்களுக்கு முன் 96 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

    கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.90 முதல், ரூ. 100 வரை செலவாகும் நிலையில் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    இதையடுத்து கறிக்கோழி பண்ணையாளர்கள் சுமார் 25 சதவீதம் வரை உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:-

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது மழை குறைவு, ஆட்கள் பற்றாக்குறை போன்றவற்றால் விவசாயம் செய்யமுடியாத நிலையில் மாற்றுத்தொழிலாக கறிக்கோழி வளர்ப்பு தொழில் செய்துவருகிறோம் . இதில் நாங்கள் மட்டும் பயன்பெறவில்லை.nபண்ணை தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், சோளம், ராகி பயிரிடும் விவசாயிகள், கறிக்கோழி பண்ணை அமைக்கும் தொழிலா ளர்கள் என நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் இந்தத்தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். கடந்த சில வாரங்களாக மூலப்பொருட்களின் விலை உயர்வு, மற்றும் தீவன தட்டுப்பாடு, நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கறிக்கோழி தொழில் நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.90 முதல் ரூ.100 வரை செலவாகும் நிலையில் புரட்டாசி மாத நுகர்வு குறைவு, விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் கறிக்கோழி உற்பத்தியை சுமார் 25 சதவீதம் வரை குறைத்துள்ளோம். நுகர்வு அதிகரிக்கும்போது வழக்கமான அளவிற்கு கறிக்கோழி உற்பத்தி செய்யப்படும்.

    கோழித் தீவனத்திற்கு மூல பொருளான மக்காச்சோளம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் கிலோ ரூ.17க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.24க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் மக்காச்சோள விளைச்சல் குறைவானதால், வெளிமாநிலங்களில் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்கிறோம். இதனால் விலையும் அதிகம்,போக்குவரத்து செலவும் கூடுதலாகிறது. உதாரணமாக பீகாரில் இருந்து மக்காச்சோளம் கொண்டுவர ஒரு கிலோவிற்கு ரூ. 4 செலவாகிறது. பல்லடத்தில் ரெயில் நிலையம் இல்லாததால், திருப்பூர் ரெயில் நிலையத்திலிருந்து மக்காச்சோள மூட்டைகளை பல்லடம் கொண்டு வர டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவாகிறது. இதனைத் தவிர்க்க மத்திய அரசு பல்லடம் வழியாக ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏனென்றால் பல்லடத்திலிருந்து கறிக்கோழி, கறிக்கோழி தீவனங்கள், காடா ஜவுளிகள், பனியன்கள், விவசாய பொருட்கள் என ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலும் சாலை வழி போக்குவரத்தை நம்பியே உள்ளதால், கால நேரமும், போக்குவரத்து செலவும் அதிகமாகிறது. எனவே பல்லடத்தில் ரெயில் நிலையம் அமையுமானால், இன்னும் ஏற்றுமதியில் சாதிக்கலாம். இதற்கிடையே கடந்த மாதத்தில் ஒரு கிலோ ரூ.35 ஆக இருந்த சோயா புண்ணாக்கு விலை தற்போது ரூ.50 ஆக விலை உயர்ந்துள்ளது. வேன்,லாரி வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்டவையும் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கோழி மருந்துகள் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மின்கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தமிழக அரசு விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் விவசாய தொழிலான கோழிப்பண்ணைகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க முன் வர வேண்டும்.

    மேலும் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் பெரும்பாலும் தென்னை, மற்றும் வெங்காயம்,தக்காளி போன்ற காய்கறிகள் ஆகியவற்றையே உற்பத்தி செய்கிறார்கள். இதனால் ஒரு சில நேரங்களில் லாபம் கிடைத்தாலும் பெரும்பாலும் விவசாயிகள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். இவர்கள் மக்காச்சோள விவசாயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஏனென்றால் மாதம் தோறும் கறிக்கோழி தொழிலுக்கு சுமார் 2 லட்சம் டன் மக்காச்சோளம் தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் டன் மட்டுமே மக்காச்சோளம் கிடைக்கிறது. இதனால் கர்நாடகா, ஆந்திரா பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்கின்றோம். இதனால் எங்களுக்கு போக்குவரத்து செலவு மற்றும் விலை அதிகரிக்கிறது. 1 ஏக்கர் நெல் பயிரிடும் தண்ணீரில் 10 ஏக்கர் மக்காச்சோளம் பயிரிடலாம். எனவே தமிழ்நாட்டில் மக்காச்சோள விவசாயத்தை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகளிடமிருந்து அவற்றை நேரடியாக பெற்று கொள்ள கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×