search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sculpture galleries"

    • திரும்பிய திசையெல்லாம் சிற்பக்கலைக் கூடங்கள்.
    • முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்களில் ஒன்று.

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதே திருமுருகன்பூண்டிக்கு பெருமை சேர்க்கும் வகையில் திரும்பிய திசையெல்லாம் சிற்பக்கலைக் கூடங்கள் நிறைந்து காணப்படுகிறது.

    கலைநயமிக்க சிலைகளை கைவேலைப்பாடுகளுடன் தத்ரூபமாகவும், துல்லியமாகவும் செதுக்குவதில் தனித்தன்மையுடனும், உலக பிரசித்தி பெற்றதாகவும் விளங்குகிறது திருமுருகன்பூண்டி சிற்பக் கலைக்கூடங்கள்.

    குறிப்பாக கருங்கல்லால் செதுக்கப்படும் சாமி சிலைகள் திருமுருகன்பூண்டிக்கு இணையாக தமிழகத்தில் வேறு எங்கும் செய்ய முடியாது என்ற அளவிற்கு பெருமைக்குரிய தொழிலாகவும், சிறந்த கலையாகவும் உள்ளது. 5 தலைமுறைகளை கடந்து, 200 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமிக்க தொழிலாகவும், கலைநயம், கைவேலைப்பாடு, கடினமான உடல் உழைப்பு ஆகியவைதான் சிற்பக் கலைக்கூடங்களின் சிறப்பு. திருமுருகன்பூண்டி, அவினாசி, பெரியாயிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 160 சிற்பக்கலைக் கூடங்கள் உள்ளன.

    அங்கு 600-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்களும், தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அங்கு கருங்கல்லால் செதுக்கப்படும் சாமி சிலைகள், தலைவர்களின் திருஉருவச் சிலைகள், கல்வெட்டுக்கள், சாஸ்திர கற்கள் போன்றவை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும் திருமுருகன்பூண்டியில் செதுக்கப்படும் சாமி சிலைகள் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்வே திருமுருகன்பூண்டி சிற்பக்கலை தொழில் தொடங்கி விட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிற்பங்கள் செதுக்கப்பட்டாலும், திருமுருகன்பூண்டியில் செதுக்கப்படும் சாமி சிலைகளுக்கு இணையாக அமையாது. அந்த அளவிற்கு கைவேலைப்பாடுடனும், அர்ப்பணிப்புடனும் இந்த தொழில் செய்யப்பட்டு வருகிறது.

    சிலைகள் தயாரிப்பில் எந்திரங்கள் உள்ளிட்ட நவீனங்கள் வந்து விட்டாலும், கைவேலைப்பாட்டில் கிடைக்கும் கலைநயமும், நுணுக்கமும் கிடைக்காது. தொழிலில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் கண்ணியம் தவறாமல் கடமையாற்றுவதே திருமுருகன்பூண்டியின் பெயர் இன்று நிலைநிற்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. சிற்பக்கலை தொழிலில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறார்கள். திருமுருகன்பூண்டி முழுவதும் சிற்பக் கலைக்கூடங்கள் இருந்தாலும் மாசுப் பிரச்சினை காரணமாக சிலைகளை செதுக்கும் பணிகளை குடியிருப்புகள் அல்லாத ஒதுக்குப்புறமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால் வாடிக்கையாளர்களும் சிலைகளை ஆர்டர் செய்வதற்கு ஒரு இடத்திற்கும், அதை பார்வையிடுவதற்கு ஒரு இடத்திற்கும் வரவேண்டி உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கும் பணம் மற்றும் நேரத்தை விரயமாக்கும். எனவே 100 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்களின் நலன் கருதி தமிழக அரசு சிற்பக்கலைக் கூடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அமையும் வகையில் சிட்கோ போன்ற நிரந்தர தொழிற்பேட்டையை ஏற்படுத்தி தர வேண்டும்.

    மேலும் மத்திய அரசு சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது சிற்ப கலைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசும் கட்டிட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி இருப்பது போன்று சிற்பக் கலைஞர்களுக்கும் கைவினைப் பொருட்கள் துறை சார்பில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.

    திருமுருகன்பூண்டியில் செதுக்கப்படும் சாமி சிலைகள் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலை கூடத்தில் செதுக்கப்பட்ட மாரியம்மன், விநாயகர், முருகன் சிலைகள் மலேசிய நாட்டில் உள்ள கோவிலிலும், யானை சிலை அமெரிக்காவில் உள்ள கோவிலிலும், விநாயகர், ஆஞ்சநேயர், லட்சுமி, அய்யப்பன், 9 நவக்கிரகங்கள் உள்ளிட்ட சிலைகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது உலக அளவில் பிரசித்தி பெற்றதாக அமைந்துள்ளது.

    இதே சிற்பக் கூடத்தில் 23 அடி உயரத்தில் 40 டன் எடையில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13 அடி உயரத்தில் 60 டன் எடையில் செய்யப்பட்ட நந்தி சிலை ஆகியவை கர்நாடக மாநிலம் பெங்களூரு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    திருமுருகன்பூண்டி முருகன் சிற்பக்கலைக் கூடத்தில் 33 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலை தமிழகத்திலேயே உயரமான விநாயகர் சிலையாக திண்டுக்கல்லிலும், மற்றொரு சிற்பக் கலைக்கூடத்தில் செதுக்கப்பட்ட 40 அடி உயரத்திலான ஆஞ்சநேயர் சிலை தமிழகத்திலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலையாக திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருமுருகன்பூண்டியின் பெருமையை பறை சாற்றுவதாக அமைந்து வருகிறது.

    • அதிகபட்சமாக 100 அடி வரை ஒரே கல்லில் சிற்பம் செதுக்க முடியும் என்கின்றனா் இங்கு பணியாற்றும் சிற்பக்கலைஞா்கள்.
    • கற்களை இடைத்தரகா்கள் செயற்கை மணலுக்காகவும், ஜல்லிக்காகவும் வாங்கி பயன்படுத்துவதாலும் விலை அதிகரித்துள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மகாபலிபுரம், காஞ்சிபுரம், சேலம், திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டி, அவிநாசி, நாமக்கல், பழனி, ஓசூா், திருவண்ணாமலை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2,500க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டி, அவிநாசியில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்புவரை 126 கலைக்கூடங்கள் செயல்பட்டு வந்தன. இந்த கலைக்கூடங்களில் 1,800க்கும் மேற்பட்ட சிற்பிகள் பணியாற்றி வந்தனா். இந்த கூடங்களில் இருந்து முருகன், விநாயகா், அம்மன் உள்ளிட்ட சுவாமி சிலைகள் மட்டுமின்றி பெரிய உணவகங்களில் அழகுக்காக வைக்கப்படும் ஆண், பெண் சிலைகள், வீட்டு உபயோகத்துக்காக அம்மிக்கல், குளவிக்கல், ஆட்டாங்கல் போன்றவையும் செதுக்கப்படுகின்றன.

    தமிழகத்தின் பிற மாவட்டங்களில் செதுக்கப்படும் சிலைகளை காட்டிலும் திருமுருகன்பூண்டி, அவிநாசி பகுதிகளில் செதுக்கப்படும் சுவாமி சிலைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உள்ளது. இங்குள்ள கலைக்கூடங்களில் குறைந்தபட்சம் அரை அடியில் இருந்து அதிகபட்சமாக 100 அடி வரை ஒரே கல்லில் சிற்பம் செதுக்க முடியும் என்கின்றனா் இங்கு பணியாற்றும் சிற்பக்கலைஞா்கள்.

    மூலப்பொருட்களின் விலை 60 சதவீதம் உயா்வு:

    திருமுருகன்பூண்டி, அவிநாசி பகுதிகளில் கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு பிரச்சினைகளால் 30க்கும் மேற்பட்ட கலைக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு மிகவும் முக்கியமான காரணம் மூலப்பொருட்கள் விலை உயா்வாகும். இந்த கலைக்கூடங்களுக்கு முன்பு வரையில் ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள குவாரிகளில் இருந்து கருங்கற்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி 30க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    போக்குவரத்து செலவும் அதிகரிப்பு :

    நாமக்கல் மாவட்டம் கொண்டம்பட்டி, காஞ்சிபுரம், நெல்லை மாவட்டத்தில் மயிலாடி ஆகிய இடங்களில் இருந்து மட்டுமே சிலை வடிப்பதற்காக கற்கள் கொண்டுவரப்படுகின்றன. சிலை வடிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக விலையும் சுமாா் 60 சதவீதம் உயா்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக போக்குவரத்துச் செலவும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இது குறித்து திருமுருகன்பூண்டி சிற்பக் கலைஞா்கள் சங்க (அவிநாசி) தலைவா் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: - கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த தொழில் சற்று சரிவை சந்தித்து வந்தது. இத்தகைய சூழ்நிலையில் கல்குவாரிகள் மூடப்பட்டு வருவதால் மூலப்பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கற்களை அதிக விலை கொடுத்து வாங்கிவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு கன அடி கல்லை ரூ.300க்கு வாங்கினால்கூட பணிக்கூடத்துக்கு எடுத்துவருவதற்கு ரூ.600 வரையில் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்தக் கற்களை இடைத்தரகா்கள் செயற்கை மணலுக்காகவும், ஜல்லிக்காகவும் வாங்கி பயன்படுத்துவதாலும் விலை அதிகரித்துள்ளது.

    வெளிநாட்டு ஆா்டா்களும் இல்லை:

    கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்னா் சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுவாமி சிலைகளுக்கு ஆா்டா்கள் வருவது வழக்கம். ஆனால் கொரோனா நோய் தொற்றுக்கு பின்னா் கடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவில் வெளிநாட்டு ஆா்டா்களும் வருவதில்லை. அதே வேளையில் சிற்பிகளுக்கான கூலியும் தற்போது உயா்ந்துள்ளது.

    நன்றாக சிலை செதுக்க தெரிந்த 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள சிற்பிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,500 வரையும், 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள சிற்பிகளுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரையிலும், உதவியாளா்களுக்கு ரூ.1,100ம் கூலியாக வழங்க வேண்டியுள்ளது. இந்த தொழிலுக்கு கண்பாா்வையும், உடல் உழைப்பும் அதிகமாக தேவைப்படுவதால் இளைஞா்கள் இந்த தொழிலில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனா். இதனால் தற்போது சிற்பிகளுக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. சிற்பிகளின் வாரிசுகள்கூட தற்போது பின்னலாடை உள்ளிட்ட வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

    மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்:

    இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு மின்கட்டணத்தை கடுமையாக உயா்த்தியுள்ளது. சிற்பக்கலைக்கூடங்களுக்கான மின் கட்டணம் 30 முதல் 40 சதவீதம் உயா்ந்துள்ளதால் இந்த தொழிலை நடத்துவது மிகவும் சவாலான விஷயமாகவே உள்ளது. ஆகவே உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெறுவதுடன், சிற்பக் கலைஞா்களுக்கு மருத்துவக் காப்பீடு, மாதாந்திர ஊக்கத்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.

    ×