search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி தடை காலம்"

    • கடல் சீற்றத்தில் சிக்கி விசைப்படகு கடலில் மூழ்கியது குறித்து ராமேசுவரம் மீன்துறை அலுவலகம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
    • அவர்கள் தங்களது புகாரில், தாங்கள் பிடித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களும் விசைப்படகுடன் கடலுக்குள் மூழ்கி விட்டதாக கூறி உள்ளனர்.

    ராமேசுவரம்:

    மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், 15-ந்தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

    ராமேசுவரம் பகுதியில் 820-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடந்த 15-ந்தேதி முதல் சுழற்சி முறையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

    அதேபோல் நேற்று ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 500 மீனவர்கள் மீன்துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    தங்கச்சிமடத்தை சேர்ந்த பாதுவைராஜன் என்பவரது விசைப்படகில் சென்றிருந்த பிரகாஷ், எபிரோன், பாண்டி, டல்லஸ், முனியசாமி, எமரிட் ஆகிய 6 மீனவர்களும் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த பகுதியில் கடல் சீற்றத்துடன் இருந்துள்ளது.

    அப்போது அவர்களது படகு கடல் அலையில் சிக்கி நடுக்கடலில் கவிழ்ந்து மூழ்கியது. படகில் இருந்த பிரகாஷ் உள்ளிட்ட 6 பேரும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதனை அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் உடனடியாக அங்கு வந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் மீட்டனர். விசைப்படகு கவிழ்ந்து மீனவர்கள் தத்தளித்ததை சக மீனவர்கள் உடனடியாக பார்த்ததால், அந்த 6 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை சக மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.

    கடல் சீற்றத்தில் சிக்கி விசைப்படகு கடலில் மூழ்கியது குறித்து ராமேசுவரம் மீன்துறை அலுவலகம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

    அவர்கள் தங்களது புகாரில், தாங்கள் பிடித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களும் விசைப்படகுடன் கடலுக்குள் மூழ்கி விட்டதாக கூறி உள்ளனர்.

    • காசிமேட்டில் கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் மலர் தூவியும் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    • கடுமையான டீசல் விலையேற்றம் காரணமாக காசிமேட்டில் இருந்து 300 விசைப்படகுகள் என 25 சதவீத படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளன.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் நேற்று வரை (14-ந்தேதி) 61 நாட்கள் இருந்தது. தடை காலம் முடிந்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    கரை திரும்ப ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால் தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், தண்ணீர்கேன் என அனைத்தையும் தங்களது விசைப்படகுகளில் ஏற்றிக்கொண்டு அதிகாலை முதல் புறப்பட்டனர்.

    முன்னதாக காசிமேட்டில் கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் மலர் தூவியும் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டு வழிபட்டு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கடுமையான டீசல் விலையேற்றம் காரணமாக காசிமேட்டில் இருந்து 300 விசைப்படகுகள் என 25 சதவீத படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளன.

    இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் விஜேஷ் கூறும்போது, மீனவர்கள் அனைவரும் கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகவும், பெட்ரோல் -டீசல் விலை உயர்வு காரணமாகவும் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு எங்களது வாழ்வாதாரம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தொழிலுக்கு செல்வதற்கு முன்னதாக கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டோம். காசிமேட்டில் மொத்தம் 1200 விசைப்படகுகள் உள்ளன. டீசல் விலை உயர்வு காரணமாக சுமார் 300 விசைப்படகுகள் மட்டும் கடலுக்குள் சென்று உள்ளன என்றார்.

    மீன்பிடி தடைகாலம் முடிந்து உள்ளதால் வரும் நாட்களில் மீன்விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×