search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார் உரிமையாளர் தற்கொலை"

    திருப்போரூர் அருகே பார் உரிமையாளர் தற்கொலை சம்பவத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

    மாமல்லபுரம்:

    திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் வசித்து வந்தவர் நெல்லையப்பன். நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த இவர் திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவரிடம் டாஸ்மாக் பார்களை மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் நெல்லையப்பன் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த வழக்கில் அவர் அளித்த மரண வாக்குமூலம் மற்றும் சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜு, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் 3 பேரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதில் முக்கிய குற்றவாளியான அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவர் தலைமறைவாக இருந்தார். காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஆனந்தனை போலீசார் கைது செய்தனர்.

    அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு மேலும் சில முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நெல்லையப்பன் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 4 வாரத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாமல்லபுரத்தில் டி.எஸ்.பி. அலுவலகம் முன் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். குற்றம்சாட்டப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர், அதிகாரிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
    மாமல்லபுரம்:

    நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் நெல்லையப்பன் (வயது 37). காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், டாஸ்மாக் பார்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வந்தார்.

    பார் நடத்தியதில் கோடிக்கணக்கான பணத்தை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். மேலும் போலீசார் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் நெல்லையப்பனுக்கு 60 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. வட்டிக்கு கடன் கொடுத்த கந்துவட்டிக்காரர்கள் கொடுத்த பணத்தை கேட்டு அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த நெல்லையப்பன் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று முன்தினம், அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் லஞ்சம் வாங்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்க வந்துள்ளார். ஆனால் புகார் மனுவை போலீசார் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    பின்னர் லஞ்ச பணம் 50 ஆயிரத்தை வீசிவிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி நெல்லையப்பன் தீவைத்துக்கொண்டார். தீயில் கருகிய அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    தற்கொலை செய்வதற்கு முன்பாக முகநூலில், எந்தெந்த போலீசார் மாதா, மாதம் லஞ்சம் வாங்கி தன் வாழ்க்கையை சீரழித்து தற்கொலை முடிவிற்கு தள்ளினர் என்ற விவரத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் பார் உரிமையாளர் தற்கொலை தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் சம்பவம் நடந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலக வளாகத்திற்கு நேற்று வந்து விசாரணை நடத்தினார். அப்போது நெல்லையப்பன் 3 தண்ணீர் கேன்களில் பெட்ரோல் கொண்டு வந்துள்ளார். அதில் ஒரு கேனில் உள்ள பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துள்ளது தெரிய வந்தது. அதுகுறித்த தடயங்களும் சேகரிக்கப்பட்டன.

    மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    மேலும் தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் முனுசாமி ஆகியோரிடம் சம்பவம் தொடர்பாக அறிக்கை பெறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த தற்கொலை வழக்கில் நெல்லையப்பன் குற்றம் சாட்டிய திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற காவல் துறை அதிகாரிகள், அ.தி.மு.க. பிரமுகர் குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே அனுமதி இன்றி இயங்கியதாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் நடத்தி வந்த தையூர், கேளம்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அய்யாவு ‘சீல்’ வைத்தார்.

    இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நெல்லையப்பன் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சொந்த ஊருக்கு உடலை கொண்டு சென்றனர். 
    மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு டாஸ்மாக் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தவர் நெல்லையப்பன் (வயது 37). நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இவர் திருப்போரூர், கேளம்பாக்கம், கண்டிகை, நாவலூர், சிங்கபெருமாள் கோவில், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் தண்டலத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தனிடம் மேல் வாடகைக்கு டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு நெல்லையப்பன் வந்தார். திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

    அவரை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நெல்லையப்பன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நெல்லையப்பன் இறப்பதற்கு முன்பு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட்டு காயத்ரிதேவியிடம் வாக்கு மூலம் அளித்தார்.

    அதில் பார் நடத்துவதற்கு 2 இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோருக்கு மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது என்று கூறி இருந்தார்.

    மேலும் நெல்லையப்பன் தனது பேஸ்புக்கிலும் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

    அந்த வீடியோவில், “பார் மேல் வாடகை எடுத்து நடத்தியதில் இதுவரை 7 வருடத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ரூ.19 கோடிக்கு மேல் மனசாட்சி இல்லாமல் பணம் பறித்து விட்டார். போலீசாருக்கு மாதாமாதம் மாமூல் கொடுத்தாக வேண்டும். ஒரு நாள் தவறினாலும் பாரை இழுத்து மூடுவார்கள்” என்று உருக்கமாக பேசி இருந்தார்.

    பணம் கொடுப்பது தொடர்பாக நெல்லையப்பனுக்கும், அ.தி.மு.க. பிரமுகர்- போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அவர் புகார் கொடுப்பதற்காக டி.எஸ்.பி.அலுவலகத்துக்கு வந்ததாக தெரிகிறது. இதன் பின்னரே அங்கு நெல்லையப்பன் தீக்குளித்து உள்ளார்.

    இதற்கிடையே மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    இதேபோல் போலீஸ் அதிகாரிகள் மீதான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி விசாரணை நடத்தி வருகிறார். அவர்கள் மீது விரைவில் துறை ரீதியிலான நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
    ×