search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணி பலி"

    • திடீரென கதவு திறக்கவும் மறுபுறத்தில் 5-வது பிளாட்பார்மில் பவுலேஷ் தவறி விழுந்தார்.
    • விபத்து நடந்த வந்தே பாரத் ரெயிலின் சி3 பெட்டியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சென்னை-கோவை இடையே சேலம் வழியாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 26-ந் தேதி வந்தே பாரத் ரெயிலில் சென்னை கீழக்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பவுலேஷ் (வயது 70). அவரது மனைவி ரோஸ் மார்க் கரெக்ட் ஆகியோர் சி3 பெட்டியில் ஈரோட்டிற்கு பயணித்தனர்.

    மாலை 6 மணிக்கு சேலத்திற்கு வந்த வந்தே பாரத் ரெயில் 4-வது பிளாட்பார்மில் வந்து நின்றது. அப்போது தனது இருக்கையில் இருந்து எழுந்த பவுலேஷ் ரெயிலின் அவசர கதவு அருகே வந்து நின்றிருந்தார். அப்போது திடீரென கதவு திறக்கவும் மறுபுறத்தில் 5-வது பிளாட்பார்மில் பவுலேஷ் தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு ரெயில்வே போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இந்த விபத்தில் அவசர கதவின் பட்டனை யாரும் அழுத்தி திறக்காத நிலையில் அது எப்படி தானாக திறந்து பவுலேஷ் கீழே விழுந்தார் என ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா நேரடியாக சேலம் ரெயில்வே நிலையத்துக்கும் சென்று விசாரித்தார். பின்னர் கோவை புறப்பட்டு சென்ற அவர் விபத்து நடந்த வந்தே பாரத் ரெயிலின் சி3 பெட்டியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

    அதில் சேலம் ரெயில்வே நிலைய பகுதியில் இருந்து 2 ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதைகளில் இறங்கி வந்து வந்தே பாரத் ரெயிலின் அவசரக் கதவு பட்டனை அழுத்தி திறந்து ரெயிலில் ஏறி மறுமுனையில் 4-வது பிளாட்பார்மில் இறங்கி சென்றது தெரியவந்தது.

    இந்த இருவரும் சென்ற சிறிது நேரத்தில் அவசர கதவு பகுதிக்கு பவுலேஷ் சென்று கதவின் மீது கை வைக்கவும் அது திறந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவசர கதவை திறந்து வைத்த ரெயில்வே ஊழியர்கள் குறித்து கோட்ட மேலாளர் விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர்கள் சேலம் ரெயில்வே நிலைய பாயிண்ட் மேன்களாக பணியாற்றி வரும் தாமரைச்செல்வன், மீனா ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்து கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா உத்தரவிட்டார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

    • சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் உள்ள சன்செட் பாயிண்ட் கடலில் குளித்து உள்ளனர்.
    • கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    மத்தியபிரதேசம் மாநிலம் தார் திரியா பகுதியைச் சேர்ந்தவர் மதன்சிங் தாகூர் (வயது 72).

    இவர் மனைவி நர்மதா தாகூர் உள்பட 120 பேருடன் 2 பஸ்களில் நேற்று மதியம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

    அதன்பிறகு அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள சன்செட் பாயிண்ட் கடலில் குளித்து உள்ளனர். அப்போது "திடீர்"என்று மதன்சிங் தாகூர் தனது மனைவி கண் எதிரே மயங்கி விழுந்து உள்ளார்.

    இதை பார்த்து அவரது மனைவி மற்றும் அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் மதன் சிங் தாகூர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காசி தமிழ் சங்கமம் பயணத்தில் பங்கேற்ற செல்வகுமாருக்கு ஏற்கனவே இருதய ஆபரேசன் செய்யப்பட்டு இருந்தது.
    • திடீர் மாரடைப்பு ஏற்பட்டதில் செல்வகுமார் உயிர் இழந்துள்ளார்.

    சென்னை:

    காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து சிறப்பு ரெயில்களில் பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

    உணவு, தங்குமிடம், ரெயில் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்கள் இல்லாமல் முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

    பல்வேறு கட்டமாக அழைத்து செல்லப்பட்ட பயணிகள் காசி, தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் சில சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு தமிழகம் திரும்பி வருகின்றனர். காசியில் இருந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் வழியாக வரும் ரெயில்களில் அவர்கள் திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு காசியில் இருந்து பாட்லி புத்ரா ரெயிலில் 216 பயணிகள் சென்ட்ரல் வந்து சேர்த்தனர். மாலையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் அவர்கள் திருநெல்வேலி செல்வதற்கு காத்திருப்போர் பகுதியில் காத்து இருந்தனர்.

    அப்போது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த செல்வகுமார் (54) என்பவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அவர் உடனடியாக பெரும்பாக்கத்தில் உள்ள தம்பிக்கு போன் செய்து வரச்சொல்லி இருக்கிறார். அவர் வந்து சேருவதற்குள் செல்வகுமார் மயங்கி கீழே விழுந்தார்.

    உடனடியாக அவரை அங்குள்ள மருத்துவ உதவி மையத்தில் சேர்த்து டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று காலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    காசி தமிழ் சங்கமம் பயணத்தில் பங்கேற்ற செல்வகுமாருக்கு ஏற்கனவே இருதய ஆபரேசன் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிர் இழந்துள்ளார்.

    இதுகுறித்து சென்ட்ரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×