search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பட்டூர்"

    • பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து.
    • “நான்” எனும் அகங்காரம் பிரம்மனிடம் தென்பட்டது.

    திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

    பெரும் சிறப்புடைய சோழநாட்டின் ஒரு பகுதியாய் இருந்த பொன்னி நதியும், காவிரி நதியும் பாயும் தென் தமிழ்நாட்டின் நடுநாயகமாய் வீற்றிருக்கும் திருச்சி மாவட்டத்தின் வடகரையில் சுமார் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் 25 கி.மீ தொலைவில் சிறுகநூருக்கு மேற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் அமைந்துள்ளது.

    இவ்வூரில் பழமையும் பெருமையும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் - ஈசன்

    கிழக்கு நோக்கிய சன்னிதி, சுயம்பு மூர்த்தி, அழகிய தோற்றம், மேலே தாராபாதிரம், நாகாபரனத்துடன் கூடிய சதுர ஆவுடை கூடிய திருமேனி, ஸ்ரீ பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி அருள் புரிந்ததால் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    ஸ்ரீ பிரம்மன் வரலாறு

    நாத மண்டபத்தின் தென்புறம் சென்றால் மிகப்பெரிய கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மா சன்னதி.

    பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மன் இல்லாத சிவ ஆலயம் இல்லை என்பது தான் உண்மை.

    எல்லா சிவ ஆலயத்திலும், ஈசனின் இடப்புறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார்.

    ஆனால் திருபட்டூரில்மட்டுமே மிக பிரம்மாண்டமாக அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சந்நிதியுடன் காட்சியளிக்கிறார்.

    பிரம்மன் ஒருமுறை இந்த உலகத்தை படைக்கும் சக்தி தன்னிடம் உள்ளது , மேலும் ஈசனுக்கும் ஐந்து தலை, தனக்கும் ஐந்து தலை என "நான்" எனும் அகங்காரத்துடன் ஈசனை மதிக்காத போக்கு தென்பட்டது.

    ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவரின் நிலையை உணர வைக்க எண்ணினார். ஆகவே, "பிரம்மனே ஐந்து தலை என்பதால் அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்" என்று அவருடைய ஒரு தலையை கொய்துவிட்டு தேஜஸ் இழக்கக்கடவாய் என்று சாபம் இட்டார்.

    பிரம்மன் தேஜஸ் இழந்ததால் படைப்பாற்றலையும் இழந்தார். தன நிலையை உணர்ந்த பிரம்மன் திருபட்டூரில் துவாதச சிவலிங்கங்களை (பன்னிரண்டு) பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்.

    ஆக, பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும் திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார்.

    பிரம்மனே உன்னுடைய வழிபாட்டில் மகிழ்ந்த யாம் எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு,

    மீண்டும் ஒருமுறை அவர்களுடைய "தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக " என்று வரமளித்தார்.

    "விதி இருப்பின் விதி கூட்டி அருளுக " என்றும் வரம் வழங்கினார்.

    பரிகாரத்தலம்

    நம் ஒவ்வொருவருடைய ஆசையுமே நாம் தற்பொழுது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம் , செல்வ நலத்துடன் வாழ வேண்டும் என்பதே.

    அதற்கு இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக வந்து பார்த்தாலே போதும். நலம் பல வழங்கி நல்வாழ்வு நல்குவர்.

    ஸ்ரீ பிரம்மாவை வழிபாடு செய்ய உகந்த நாட்கள்

    திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நம்முடைய பிறந்த நட்சத்திரத்தன்று இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தல் சிறப்பு.

    தலையெழுத்தையே மாற்றுவார் என்பதால் சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாகும்.

    பரிகார முறை

    முதலில் இத்தலத்திற்கு வருகை தருதல் வேண்டும். பின்னர் ஈசன், பிரம்மன், அம்மன் ஆகியோரை தரிசித்து விட்டு, முப்பத்தி ஆறு தீபமிட்டு ஒன்பது முறை வளம் வந்து வேண்டுதல் வேண்டும்.

    ஒவ்வருவருடைய ஜாதகத்தை பிரம்மன் பாதத்தில் வைத்து வேண்டுதல் செய்தால் அது அவ்வாறே நடக்கும் என்பது ஐதீகம்.

    இவ்வாறு வேண்டி பலன் பெற்றோர் பல பேர் உள்ளனர்.

    பொதுவான பரிகாரம்

    கணவன் மனைவி பிரிந்தவர் கூடுதல், வியாபாரத்தில் நஷ்டம், திருமணத் தடை, பிள்ளைகள் இழப்பு, கல்வியில் பாதிப்பு, வறுமை, குழந்தை இன்மை, மன வியாதிகள், பூரண ஆயுள், என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக நின்று தரிசித்தாலே போதும் சகல தோஷங்களும் நீங்கி "திருபட்டூர் வந்தோம் திருப்பம் நிகழ்ந்தது " என்ற நல்ல மங்களகரமான நிலை அடையலாம்.

    • திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது.
    • பூணூல் கல்யாணம் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம்.

    1. சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.

    2. இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.

    3. இத்தலத்தில் 3001 அந்தனர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது.

    4. இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.

    5. கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.

    6. `திருக்கயிலாய ஞான உலா' எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.

    7. சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.

    8. சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.

    9. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும். அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.

    10. பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்க சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

    11. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

    12. பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

    13. ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.

    14. பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

    15. குரு பகவானுக்கு அதி தேவதையான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.

    16. இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.

    17. சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

    18. தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.

    19. தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளை சொல்லி வணங்குவதற்காகத்தான் இத்தலத்தில் காலபைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.

    20. இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

    21. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்த பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.

    22. இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.

    23. திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய பூமியாக திகழ்ந்தது.

    24. பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.

    25. திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.

    26. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

    27. 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.

    28. வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.

    29. ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.

    30. ஒரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி, செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்.

    ×